Thursday 9 April 2015

20 கூலிகளின் கொலை

மரம் வெட்டுதல் என்பது தொழிலா ?

ஆம், கிராமத்து கூலித் தொழிலாளிகளைப் பொருத்தவரை மரம் வெட்டுவதென்பது ஒரு தொழில்தான். ஆனால் படித்த, நடுத்தர, மேல்தட்டு நகரவாசிகள் நினைப்பதுபோல அது சந்தனமரம், செம்மரம் வெட்டிக் கடத்துவதல்ல. உசிலை மரம், வேப்பமரம், புளியமரம் போன்றவற்றை விறகுக்காக வெட்டும் தொழில். இது தோட்டத்தில் பயிர்களுக்கு களை பறிக்க செல்வதுபோன்று அன்றாடம் நடக்கும் ஒரு தொழில். கிராமத்து பின்னணியில் இருந்து வந்தவர்களுக்கு இது நன்கு தெரியும்.
கொல்லப்பட்டவர்கள் கடத்தல்காரர்களா ?

இல்லை. கொல்லப்பட்டவர்கள் கூலித் தொழிலாளிகள். ஒரு மாநிலம் விட்டு மற்றொரு மாநிலத்திற்கு பிழைப்பிற்காக சென்றவர்கள். 200 ரூபாய் கூலி சொந்த ஊரில் கிடைகிறது. ஆனால் 400 ரூபாய் பக்கத்து மாநிலத்தில் கிடைக்கிறதென்றால் தங்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ள அந்த வேலையைத் தேடித் கூலிக்குப் போவதென்பது இயல்பு. இதை பேராசை என்று ஒருசாரர் சொல்வார்களேயானால், நல்ல சம்பளத்திற்கு வெளிமாநிலத்திற்கு வேலைக்குப்போகும் படித்த பட்டதாரிகளும் பேராசைக்காரர்கள் தானே ?

தமிழ்நாட்டின் பானிபூரி விற்க வடநாட்டில் இருந்து எதற்கு வருகிறான் ? அங்கு அவனுக்கு வேலை கிடைக்கவில்லை. அங்குள்ளோர் யாரும் பானிபூரி சாப்பிடுவதில்லை என்று அர்த்தமல்ல. இங்கு விற்பதில் அவனுக்கு சில நன்மைகள் இருக்கிறது. வாழ்க்கைத் தரத்தை உயர்த்தலாம் என்று அவன் நினைத்திருக்கலாம். அதை தவறு என்று யாரும் சொல்ல முடியாது.

வெட்டுவது செம்மரம், அது சட்டப்படிக் குற்றம் என்பதையெல்லாம் தெரியாதவர்கள், செம்மரங்களின் சர்வதேச மதிப்பு என்னவென்று தெரியாத அப்பாவிகளைத்தான் இந்த கடத்தலுக்குப் பின்னிருக்கும் பண முதலைகள் பயன்படுத்தி இருப்பார்கள். அனைத்து விவரமும் தெரிந்தவர்களை பணியமர்த்த அவர்கள் என்ன முட்டாள்களா ? உண்மையில் யோசித்திபோருங்கள், ஒரு டன் செம்மரம், சர்வதேசச் சந்தையில் ஒரு கோடியைக்கூட எட்டும் என்பது, படித்த எத்தனை பேருக்கு இதற்கு முன்பே தெரிந்திருக்கும் ?

மரம் வெட்டி இயற்கை வளத்தை அழிப்பதை நியாயப் படுத்தவில்லை. ஆனால், மரம் என்பது இயற்கை வளம், அதைப் பாதுகாப்பது அவசியம். மழைவர மரம் காரணம், அது நமது வாழ்வாதாரம் என்றெல்லாம் 200 ரூபாய் கூலிக்குபோகும், கல்வியறிவு கிடைக்கப்பெறாத, அதைப்பற்றி யோசிக்க முடியாத நிலையில், அன்றாட உணவிற்காக போராடும் எளிய மனிதர்களிடம் எதிர்பார்க்க முடியாது. ஆக, அவர்களின் வறுமையும் அறியாமையும் மட்டுமே இங்கே பயன்படுத்தப் பட்டிருக்கிறது. அவ்வளவே.
யார்தான் இதற்குக் காரணம் ?

வெளிமாநில ஆட்களை அழைத்து வந்து, ஒரு கொலை செய்வதில் அந்த கொலை செய்யும் கும்பலுக்கு என்னென்ன நன்மை இருக்கிறதோ, அதே போன்ற நன்மைகளுக்கத்தான் விவரம் தெரியாத, மொழி தெரியாத, வெளியாட்களை இறக்குமதி செய்து பணியமர்துகிறார்கள். இதே வேலையைச் செய்ய உள்ளூர்க்காரனை பயன்படுத்தினால் இந்த கும்பல் எளிதாகச் சிக்கும் என்று அவர்களுக்குத் தெரியாமலா போயிருக்கும் ? அதோடு 20 பேரை சுட்ட ஒரு படையால், ஒருவனைகூடவா உயிருடம் பிடிக்க முடியவில்லை ? இந்த கடத்தலின் பின் இருப்பவர்களை அடையாளம் காண முடியவில்லை ?

சுடப்பட்ட இந்த கூலித் தொழிலாளிகளா சர்வதேச சந்தையில் செம்மரங்களை விலைபேசி விற்கிறார்கள் ? ஆலமரத்தின் ஆணிவேரை விட்டுவிட்டு அதன் விழுதை வெட்டுவதால் என்ன பயன் ? இதற்குப் பின், மிகப்பெரும் ஆள் பலம், அரசியல் பலம் இருக்கிறது. அந்த முதலைகளை விட்டுவிட்டு இந்த கூலிகளைக் கொன்றது சரி என்று பேசுபவர்கள் அடிப்படை புரியாதவர்கள் என்றே பொருள் கொள்ளவேண்டும். ஒரு கூலியைச் சுட்டுவிட்டால் இன்னொரு கூலி வராமல் போகமாட்டான். செம்மரம் வெட்டியதாகச் சொல்லி, 20 பேர் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தியைக் கூட அறியாத கடைக்கோடி இந்திய குடிகள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். அவர்களை இந்த மாபியா கும்பல் மீண்டும் பணியமர்த்தும். அவர்களின் வறுமையை மீண்டும் பயன்படுத்தும்.

இங்கு ஏதோ ஒரு அரசியல் அழுத்தத்திற்காக, ஒரு சாராரை திருப்திப் படுத்துவதற்காக, ஒரு படுகொலை அரங்கேற்றப் பட்டிருக்கிறது, அப்பாவிகள் கொல்லப் பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. இதைப் புரிந்து கொள்ளாமல், கூலிகளின்மீது பழிசுமத்துவதில் குறியாகத் திரியும் ஒரு குறிப்பிட்டோரை நினைத்து, வருத்தப்பட மட்டுமே முடிகிறது. இதன் பின்னணியில் இருக்கும் பெரு முதலாளிகளைப் பற்றி இவர்களால் பேச முடியாதபோதே இவர்களின் நோக்கம் என்ன என்பது புரிந்துவிடும். இந்த அப்பாவிகளின் கொலைகளில்கூட, மனிதாபிமானமற்ற முறையில், சில மதவாதிகள் மதத்தைக் கொண்டு திணிக்கிறார்கள் என்பது உச்சகட்ட வேதனை !

அகல்
10.4.2015

No comments:

Post a Comment