Friday 17 May 2013

எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே !


இன்று மாலை (17/5/13) 5.15 மணிக்கு அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு கிளம்பினேன். 5.30 மணியளவில் ஹைதராபாத்தில் நாங்கள் தங்கி இருக்கும் கச்சிபோவ்லி என்னும் இடத்தில் (வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில்) வாகன நெரிசல் மிகுதியாகக் காணப்பட்டது. வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு வேகமாகச் சென்று பார்த்தேன்.

சாலையில் ஒரு பாதியில், வானத்தைப் பார்த்து ஒரு உடல் சரிந்து கிடந்தது. பின்தலையில் அடி. அவரின் தலை இருக்கும் இடத்தில் இருந்து ஒன்றரை மீட்டர் தூரத்திற்கு ரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது. காது, வாய், மூக்கு இவற்றிலும் ரத்த ஓட்டம் குறையாமல் வெளிவந்து கொண்டிருந்தது. சட்டை, கைகள் முழுதும் ரத்தம். ஆனால் இதயத்துடிப்பு நிற்கவில்லை. பெருமூச்சு விட்டுக்கொண்டு இன்னும் உயிர் இருந்தது.

ஒரு நீர் குமிழியில் நீர் கொப்பளித்தால் எவ்வாறு இருக்குமோ அவ்வாறே கொப்பளித்துக் கொண்டு வெளிவந்தது மூக்கில் இருந்து சுவாசக் காற்றுடன் கலந்துவந்த ரத்தம். அதை ஒரு மிகப்பெரும் கூட்டம் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவரின் இதயத்துடிப்பு நிற்காமல் இருக்க, நெஞ்சை பிடித்து அழுத்தினேன். உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் அவரை காப்பாற்ற முதலில் 108 ஆம்புலன்சிற்கு அழைத்து சொல்லிவிட்டு, வீட்டில் இருக்கும் என் நண்பனை அந்த இடத்திற்கு வரச்சொன்னேன். சுட்டெரிக்கும் சூட்டில், வாகன நெரிசலுக்கிடையே நடுரோட்டில் கிடக்கும் அவரை ஓரமாக தூக்கிவைத்து முதலுதவி ஏதேனும் செய்ய நினைத்தேன். 

நான் கெஞ்சி கேட்டுக்கொண்டதில் கைகளைப் பிடித்து தூக்க ஒருவர் முன்வந்தார். அடிபட்டுக் கிடந்த அவரின் இரண்டு கால்களையும் பிடித்து நான் தூக்கினேன். ஆனால் அருகில் இருந்தவன், போலீஸ் வரட்டும் தொடாதீர்கள் என்று சொல்லியதும், கைகளைப் பிடித்தவர் விட்டுவிட்டார்.

என்ன செய்ய ? போலீஸ் வருவதற்குள் இவன் செத்தால் பரவாயில்லையா என்று என்னை அறியாமல் நடு ரோட்டில் கத்தினேன். சிறிது நேரத்தில் ஒரு போலீஸ் கான்ச்டபுள் அந்த இடத்திற்கு வந்தார். எப்படியும் இந்த நெரிசலில் அம்புலன்ஸ் வருவது அவ்வளவு எளிதல்ல என்று எண்ணி, ஓரத்தில் போய்க் கொண்டிருக்கும் ஆட்டோக்களை வலி மறித்து அருகில் உள்ள ஏதேனும் ஒரு மருத்துவ மனையில் முதலுதவி செய்ய முயற்சித்தேன். போலீஸ்காரரும் தன் பங்கிற்கு ஆட்டோக்களை வழிமறித்தார். அவரையும் மதிக்காமல் பலர், விட்டால் போதும் என்று முறுக்கிப் பிடித்து ஓடினார்கள். ஒருகூட்டம் பார்த்துக் கொண்டே போனது.

கடைசியில் ஒரு இளம் ஓட்டோ ஓட்டுனர் உதவ முன்வந்தார். இருவரின் உதவியுடன் அவரை தூக்கி ஆட்டோவின் பின்புறத்தில் படுக்க வைத்தேன். எனக்கு ஹிந்தி, தெலுங்கு தெரியாது, அதனால் இங்கு வசிக்கும் யாரேனும் என்னுடன் வாருங்கள் என்று கேட்டேன். ஒருவரும் முன்வரவில்லை. 

அந்த உடல் உயிருக்கு போரட்டிக்கொண்டு ஆட்டோவில் கிடந்தது. அந்த இடத்தில் குறைந்தது 5 நிமிடம் விரயமானது. கடைசியில் ஒருவர் முன்வந்தார். ஆட்டோ டிரைவர், போலிஸ்காரர், நான் மூவரும் முன் சீட்டில் அமர்ந்து கொண்டோம். அந்த ஒருவர் பின் சீட்டில் அமர்ந்துகொண்டு அடிபட்டவரின் தொல்ப்பட்டையை பிடித்துகொண்டார்.

அடிபட்டது பின்தலை என்பதால் நடம்புமண்டலம் மிகவும் பாதிக்கப் பட்டிருக்கும் போல் தெரிந்தது. காரணம் அவரின் கால்களை மடக்கி ஆட்டோவின் உள்ளே வைக்க முடியவில்லை. முற்றிலும் விரைத்தபடி இருந்தது. அதனால் முன்சீட்டில் அமர்ந்துகொண்டு பின்புறம் திரும்பி அவரின் கால்கள் தரையில் படாமல் தூக்கிப் பிடித்துக்கொண்டேன். அது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.

இருந்தும் முயற்சி செய்து பிடித்துகொண்டு, பின்புறம் அமர்ந்திருபவரிடம் அடிபட்டவரின் நெஞ்சை அழுத்தச் சொன்னேன். அந்த நபர் அடிபட்டவரைப் பார்த்து எனது கசின் என்றார். யாரோ தகவல் கொடுத்ததின் பேரில் அவர் அந்த இடத்திற்கு வந்திருக்கிறார். இருவரின் பெயரையும் கேட்டேன். இரண்டு முஸ்லிம் பெயர்களைச் சொன்னார் (அந்த நேரத்தில் சொல்லப்பட்டதை என்னால் ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை).

ஒரு வழியாக ஒரு சிறிய மருத்துவமனையைப் பார்த்து முதலுதவிக்காக ஆட்டோக்காரர் நிறுத்தினார். ஓடிப்போய் ரிசப்சனில் அவசரத்தை போலீஸ்காரரும், நானும் சொன்னோம். நான்கு சக்கர வண்டியில் அவரை உள்ளே தூக்கி கொண்டு சென்றோம். ஆனால் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார் பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்று மருத்துவர் சொன்னார்.

அடிபட்டவரின் சகோதரனும் நண்பரும் அப்போது அங்கே வந்துவிட்டார்கள். மாருதி ஆம்னி காரின் பின்புறத்தில், அடிபட்டவரை அவரின் கசின் மற்றும் சகோதரன் தாங்கிப் பிடித்துக்கொள்ள, நான் மற்றும் போலீஸ்காரர் முன்னே அமர்ந்து கொண்டோம். அவரின் நண்பர் காரை வேகமாக இயக்கினார். அப்போது மணி 6.15 இருக்கும். போலீஸ்காரர் அந்த நேரத்து கடும் வாகன நெரிசலை வண்டியில் அமர்ந்துகொண்டு விசிலடித்து விளக்க முடிவு செய்தார். நான் எனது கை வெளிப்புறம் எட்டிய அளவிற்கு காரை பலமாக தட்டிக்கொண்டே போனேன். 

கார் வேகமாக வந்து பிரிமியர் மருத்துவமனையை அடைந்தது. அவர் ICU அறைக்கு கொண்டு செல்லப்பட்டார். முதலுதவி அளிக்கப்பட்டது. போலீஸ்காரர் என்னைப் பற்றிய ஆதாரங்களை திரட்டிக்கொண்டார். திடீரென எங்களை மருத்துவர் அழைத்தார். ICU விற்குள் சென்றோம். அடிபட்டவரின் கை, கால் நரம்புகள் முற்றிலும் முறுக்கிக் கொண்டிருந்தது.

கையுறை அணிந்திருக்கும் மருத்துவரின் கையில் ரத்தம் நிறைந்த ஏதோ ஒரு சிறிய துண்டு இருந்தது. அதைக் காண்பித்து மூளையில் பலத்த அடிபட்டுள்ளது, ஏறக்குறைய முற்றிலும் சிதைந்து விட்டது, அதன் சிறிய பாகம் தான் இது என்று ஆங்கிலத்தில் கூறினார். அப்போது என்னை அறியாமல் ஏதோ ஒரு உலகத்தில் இருப்பதாக மட்டும் உணர முடிந்ததது. சற்று நேரம் கழித்து மீண்டும் அழைத்தார். அவரின் அறைக்குள் போனோம்.

0% மட்டுமே இவரால் உயிர்வாழ முடியும் என்றார். அடிபட்டவரின் சகோதரனுடன் சேர்ந்து நானும்

"எப்படியாவது காப்பாற்றுங்கள்" என்றேன். 

"நான் ஒன்று சொல்லவா ? நீங்கள் மிகவும் தாமதமாக வந்திருக்கிறீர்கள் அதோடு இவர் இருக்கும் நிலைக்கு உலகில் உள்ள எந்த நரம்பியல் மருத்துவராலும் காப்பாற்ற முடியாது. அதிகபட்சம் ஒரு மணிநேரம் உயிர்வாழ்வார்" என்றார்.

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அப்போது என் நண்பனும் மருத்துவமனைக்கு வந்துவிட்டான். அவனிடம் மருத்துவர் சொன்னதை சொல்லிவிட்டு அங்கு இருக்க மனமில்லாமல் அவனிடம் போகலாம் என்றேன்.

போலீஸ்காரரிடம் நான் கிளம்புறேன் சார் என்றேன். அவர் கையைக் குலுக்கி "மனிதாபிமனத்தொடு வந்ததற்கு நன்றி, என்னிடம் உங்களுடைய தகவல் இருப்பதால் பயப்படவேண்டாம்" இது வெறும் சாட்சிக்கே என்றார்.

காய்ந்துபோன சில துளி ரத்தக் கரைகள் படிந்த கைகளோடு நண்பனுடன் 7 மணியளவில் வீடு திரும்பினேன்.

இதில் கவனிக்கப் படவேண்டிய சில விடயங்கள்:

1. விபத்து நடந்தது நான்கு சாலைகள் இணையும் இடம். ஒவ்வொருநாளும், அந்த இடத்தில் சிறு குழந்தைகளை ஏற்றிவரும் பள்ளி வாகனம் முதல் அனைவரும் கண்மூடித்தனமாக ஓட்டுவார்கள். அது ஹைதராபாத் நகரின் ஓரமாகச் செல்லும் மும்பை தேசிய நெடுஞ்சாலை. மக்கள் நெருக்கம் நிறைந்த அந்த இடத்தில் ஒரு சிக்னல் இல்லை. அந்த இடத்தில் முன்பெல்லாம் இருந்த ட்ராபிக் போலிஸ் சில நாட்களாக இருக்கவில்லை (இருந்தாலும் சாலையின் ஓரமாக உட்காந்து அவன் மொபைலை நோண்டிக் கொண்டிருப்பான் - பல முறை பார்த்திருக்கிறேன்). இது முதல் தவறு.

2. ஒரு கார்க்காரன் மோதிவிட்டு ஓடிவிட்டதாகச் சொன்னார்கள். அதோடு அடிபட்டவர், அவரோடு வந்த ஒருவர், யாரும் ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை (யார் ஒட்டியது என்று எனக்குத் தெரியாது, கூட வந்தவருக்கு காலிலும் வயிறிலும் பலத்த காயம்)

3. 43 டிகிரி சுடும் மே மாத வெயிலில், சமமாக இருக்கும் சாலையில் ஒன்றரை மீட்டர் அளவிற்கு ரத்தம்போக குறைந்தது அரைமணி நேரம் ஆகாமல் இருந்திருக்காது. அந்த வெப்பத்தில் விரைவாக உறையும் ரத்தம் ஒன்றரை மீட்டர் அளவிற்கு போகும் வரை உயிர்க்குப் போராடிக் கொண்டிருக்கும் அவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது ஒரு கூட்டம். இவர்களை என்ன செய்ய ? தனக்கு வந்தால்தான் உயிரின் அருமை தெரியுமா ?

4. விபத்து என்று தெரிந்ததும் பல ஆட்டோக்காரர்கள் அந்த இடத்தைவிட்டு தப்பிக்கவே முயற்சி செய்தார்கள். உதவ முன்வரவில்லை. அவர்களுக்கு இந்த நிலை வராதா ?

5. எனது வேண்டுகோளுக்கிணங்க ஒருவர் அடிபட்டவரை சாலையின் ஓரமாகத் தூக்கிவைக்க முன்வந்தார். போலீஸ் வரட்டும் என்று சொல்லி அதையும் ஒருவன் தடுத்தான். அவனது மண்டையை அடித்து உடைத்து படுக்கவைத்து போலீஸ் வரட்டும் என்று சொன்னால் நன்றாக இருக்காதா ?

6. அவரவர் ஐடியா கொடுத்தார்களே தவிர, ஒருவர்கூட ஆட்டோவில் ஏற முன்வரவில்லை. ஒவ்வொருவரையும் கெஞ்சி வரச்சொன்ன அந்தப் போராட்டத்தில் 10 நிமிடங்களுக்கு மேல் வீணானது. அந்த நேரம் மிக முக்கியானது என்பது இந்த மனிதர்களுக்கு தெரியாமலா போய்விடும் ?

7. விழுந்துகிடந்தது ஒரு முஸ்லிம் சகோதரன். ஆனால் அந்த கூட்டத்தில் இருந்த இரண்டு முஸ்லிம்கள் இதைச்செய் அதைச்செய் என்று மொழிதெரியாத என்னிடம் முன்மொழிந்தார்களே ஒழிய, அவனை காப்பாற்ற முன்வரவில்லை.

மனிதம் போதிக்கும் மதக்கொள்கைகளைப் பின்பற்றாமல் மதத்தை மட்டும் தூக்கிப் பிடிப்பதில் என்ன பயன் ? (இதை எல்லாரும் செய்கிறார்கள் என்று பொதுமைப் படுத்தவில்லை. அதனால் இதைப் படிப்பவர்கள் தயவு செய்து இஸ்லாம் சகோதர்கள் மீது தாக்குதல்களைத் தொடுக்கவேண்டாம். அனைத்து மதத்திலும் நல்லவர் கெட்டவர் உண்டு)

ஒரே ஒரு மன நிம்மதி. எப்போதும் நாம் குறைசொல்லும் போலீஸ்காரர்களில் மனிதாபிமானமிக்க ஒருவரையும், மனிதம் நிறைந்த ஒரு ஆட்டோ ஓட்டுனரையும் சந்தித்ததில்.

எது எப்படியோ மனிதாபிமானமற்ற பலரின் செயலால் முன்பின் தெரியாத ஒரு சகோதரனை கண்முன்னே இழந்தேன். இங்கே தெரிந்தது அவர்களின் இன, மொழிப்பற்றும் கேடுகெட்ட நகர கலாச்சாரமும்.

இதே விபத்து எனது கிராமத்திற்கு அருகே நடந்திருந்தால், அடிபட்ட அடுத்த நிமிடமே மடியில் ஏந்தி சோடா கொடுத்திருப்பான் ஒருவன். அவனை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல தனது வண்டியை எடுத்துக்கொண்டு வந்திருப்பான் மற்றொருவன். எதை எதையோ எதிர்பார்த்து பல பட்டங்கள் பெற்ற இவர்களை விட, எதையும் எதிர்பார்க்காமல் ஓடிவரும் படிக்காத அந்தப் பாமரன் எவ்வளவோ மேல்.

இதே போன்று முன்பொருமுறை எனக்குக் கிடைத்த அனுபவம் இங்கே இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள்

தயவு செய்து கட்டாயம் இதைப் பகிருங்கள். இது போன்ற விபத்துக்கள் அடுத்தவருக்கு மட்டுமே வராது, நமக்கும் வரும் என்பதை இந்த உலகம் உணரட்டும்.

கனத்த மனதுடன்,
அகல்

31 comments:

  1. I don't know what to say. Hope you will understand.

    ReplyDelete
  2. எனக்கும் என்ன? சொல்வதெனத் தெரியவில்லை.
    உங்கள் மனிதாபிமானத்தையும், பொறுப்புணர்வையும் மதிக்கிறேன்.உங்களுக்கு உதவ வந்த போலிஸ்,ஆட்டோ சாரதி இருவரையும் போற்றுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே... ஆம் அந்த போலீஸ் மட்டும் ஆட்டோக்காரர் இல்லையென்றால் மருத்துவமனைக்குக் கூட போயிருக்க முடியாது...

      Delete
  3. i dont know what to say.....but dont worry,u did a good job sir as u can....but around 30 mins he was in same place??????cant imagine that situation..sorry :(

    ReplyDelete
  4. மனிதர்களுக்கு மனிதாபிமானம் என்பதே மரத்து போய் விட்டது

    ReplyDelete
    Replies
    1. உண்மை... அது பேச்சளவில் விவாதிக்கப்படும் பொருளாகப் போய்விட்டது...

      Delete
  5. அன்பர் அகல் அவர்களே,

    நிகழ்வும் முடிவும் கண்களில் நீர் தேங்க செய்தது.

    முன்பின் அறியாத ஒருவருக்கான தங்களின் மனப்பூர்வமான மனிதாபிமான செயலுக்கு எனது உளமார்ந்த நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.

    தங்களின் ஆதங்கத்திலும் நான் பங்கேற்கிறேன்.

    வாஞ்சையுடன்
    வாஞ்சூர்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் வாஞ்சூர்...

      Delete
  6. வரி வரியாக படிக்கும்போது இதயம் கனக்கிறது.. நமது இந்தியாவில் ஆபத்திலிருப்பவரை காப்பாற்றுவது கடமை.. தவறினால் குற்றம், பாவம் என்று னமக்கு சிறுவயதில் மனதில் நிற்கும்படி போதிக்கவோ அல்லது நமது ரோல் மாடல்கள் நம் முன் அப்படி வாழ்ந்துகாட்டவோ இல்லை.
    அப்புறம் அவர் முஸ்லீம் சகோதரனோ அல்லது எந்த மதத்தினனோ உயிர்.. ரத்தம்... மூளை... நரம்பு மண்டலம்... அவர்தம் குடும்பத்துக்கு இன்னும் 50 ஆண்டுகளுக்கு ஈடு செய்யமுடியாத பேரிழப்பு... எல்லாம் பொதுவானதே!!

    ReplyDelete
    Replies
    1. இதற்கு யார் பொறுப்பு என்று ஆராய்ந்தால், நமது கல்விமுறை, சட்டம், பெற்றோர் என பட்டியல் மிக நீளும் நண்பரே... உண்மையில் இதற்கு அவர்களும் உடந்தை தான்..

      Delete
    2. உண்மை நண்பரே இதற்கு நமது கல்வி முறைதான் மிக மிக முக்கிய காரணம். ஏன் என்றால் நாம் சம்பிரதாயத்திற்காக கல்வி கற்கிறோம். விஞ்ஞானம் என்ற போர்வையில் மனிதாபி மானத்தை மறந்து விட்டோம்.

      Delete
    3. ஆம் அப்பட்டமான உண்மை... நல் ஒழுக்கம், சமூகப் பொறுப்புணர்வு, மனிதாபிமானம் என்று எதையும் போதிக்காத அரைவேக்காட்டு முறை நமது கல்வி முறை...

      Delete
  7. உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக சகோதரர் அகல்..

    //மனிதம் போதிக்கும் மதக்கொள்கைகளைப் பின்பற்றாமல் மதத்தை மட்டும் தூக்கிப் பிடிப்பதில் என்ன பயன் ? //

    நெத்தியடியாய் சொன்னீர்கள். இந்த நேரத்தில், என் பெரியம்மா விபத்தில் சிக்கியபோது, தக்க நேரத்தில் அவர்களை மருத்துவமனையில் சேர்த்து உயிரை காப்பாற்றிய இஸ்லாமிய சகோதரர்களை நினைத்து பார்க்கின்றேன். அவர்கள் எங்கே, மனித நேயத்தை தொலைத்து விட்டு நிற்கும் நீங்கள் குறிப்பிட்டுள்ளவர்கள் எங்கே...மார்க்கம் என்பது ஒருவரை நல்வழிபடுத்த வேண்டும், அதனை விட்டுவிட்டு தானும் முஸ்லிம் என்று கூறிக்கொள்வதில் பயனில்லை. இவர்களின் தவறுக்கு நிச்சயம் தக்க தண்டனையை பெற்றுக்கொள்வார்கள்.

    உங்களின் மனிதநேயத்திற்கு ஒரு salute. உங்களுக்காவும், உங்கள் குடும்பத்தினர்களுக்காகவும் என்னுடைய மனமார்ந்த பிரார்த்தனைகள்..

    வஸ்ஸலாம்,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஆஷிக்....

      Delete
  8. படிக்கும்போது மனம் கனத்து விட்டது. உங்கள் மனிதாபிமானம் நிறைந்த உதவிக்கு என் மனமார்ந்த நன்றிகள். இப்போதெல்லாம் மனித உயிர் மலிவாகிவிட்டது போலும்... இங்கு வேலூரிலும் தேசிய நெடுஞ்சாலையில் மாதந்தோறும் காரோ, லாரியோ அடித்து போட்டுவிட்டு போய்க்கொண்டே இருக்கிறது. முக்கியமான இடங்களில் சாலைகளை கடக்க சுரங்க பாதை கேட்டு உண்ணாவிரதம், போராட்டம் நடந்தும் இன்னும் வந்த பாடில்லை. எங்கோ நடக்கிறது என்று மக்களும் போய்கொண்டிருக்கிறார்கள். விபத்து விழிப்புணர்வும், மனிதாபிமானமும் நிச்சயம் தேவை. விபத்தை தடுக்க போக்குவரத்து துறை எல்லா நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும். உங்களுக்கு மரியாதை கலந்த என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.!!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி உஷா...

      Delete
  9. மிக அழகாக எடுத்துரைக்கின்றீர்கள்.

    பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டீர்கள்.

    மதத்தை ஏற்று கொண்டால் மட்டும் போதாது. அதன்படி நடக்க கற்று கொள்ள வேண்டும். அதை அழகாக உணர்த்தி உள்ளீர்கள்.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த பிரார்த்தனைகள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஹாஜா மைதீன்...

      Delete
  10. ஸலாம் சகோ.அகல்,
    இக்காலத்தில் இதுதான் 'நகர நெடுஞ்சாலை நிதர்சனம்'..!

    'நம்மில், "மனிதத்தன்மை உள்ள மனிதர்கள்" யார் யார்' என்பதை சோதனை மூலம் அறிந்துகொள்ளும்/அறிவிக்கும் இடமும் நேரமும் சூழலும் இதுதான் சகோ..! விபத்தில் அவர் இறந்தாலும் இறைவன் உங்களுக்கு வைத்த சோதனையில் நீங்கள் அமோகமாக வெற்றி பெற்று விட்டீர்கள்.

    நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் இருந்த அந்த மாபெரும் மனித வெள்ளத்தில், 'இப்படியானவர்களாக... நீங்கள், போலிஸ், ஆட்டோகாரர் என அந்த அடிபட்டவரின் கசினையும் நண்பரையும் சேர்த்து, 0.01% கூட இருந்திருக்க மாட்டார்கள் போலவே..' என்று நினைக்கும் போதுதான் நம் சமூகத்தில் உள்ள stunning ground reality of anti-humanity நச்சுக்காற்றாக வந்து நெஞ்சை அடைக்கிறது..!

    எவ்வளவுதான் மனிதத்தன்மை குறித்து நம்மில் பெரும்பாலோர் பேசினாலும் எழுதினாலும்... 'செயலில் இல்லை' என்றால்... அங்கே வேடிக்கை பார்த்த எல்லாரையும் 'கொலையாளிகள்' என்றுதான் கூற வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது..!

    உதவியை ஆரம்பித்து வைத்த உங்களுக்கும், உங்களுடன் உதவ வந்தவர்களுக்கும் இறைவன் இன்னும் அருள்புரியட்டுமாக..!

    ReplyDelete
    Replies
    1. // அங்கே வேடிக்கை பார்த்த எல்லாரையும் 'கொலையாளிகள்' என்றுதான் கூற வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது // உண்மை.. அவரின் உயிர் பிரிந்ததற்கு அவ்வளவு நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் மிக முக்கியமான காரணம். மிக்க நன்றி ஆஷிக்...

      Delete
  11. THANKS... SAKOTHARAA MAY ALLAH BLESS YOU......

    ReplyDelete
  12. You hardly find the Humanity or Brotherhood in the Urban society. People here are adopted to the "dont' care" method for anything, unless otherwise it happens for them. People should understand the value of a life and at least stay away from stopping the person who is trying to help on these situations.

    ReplyDelete