Monday 1 September 2014

தமிழக மாணவர்களும் ஈழ வியாபாரமும் - ஒரு அனுபவம்

தமிழ் மீனவர் உரிமை, தனித் தமிழீழம் போன்ற கோரிக்கையை முன்வைத்து, லயோலா கல்லூரி மாணவர்கள் முன்னெடுத்த போராட்டம், தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் என தீயாய்ப் பரவிக் கொண்டிருந்த நேரம் அது. அப்போது ஹைதராபாத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். என்னோடு தங்கி இருந்த இரண்டு கல்லூரி நண்பர்களின் துணையோடு, தமிழகத்தில் மாணவர்கள் நடத்திக் கொண்டிருந்த போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாக ஹைதராபாத்தில் ஒரு போராட்டத்தை முகநூல் வழியாக அறிவித்தோம்.

தமிழன் என்ற எண்ணத்தைத் தாண்டி, மனிதன் என்ற உணர்வோடு அங்கே எதிர்பாராத அளவிற்கு இளைஞர்கள் கலந்துகொண்டார்கள். சில நெருக்கடிகளோடு போராட்டம் நன்றாக நடந்து முடிந்தது. சில தமிழ் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சிகளிலும் இந்தப் போராட்டம் பதிவு செய்தது.

இந்தப் போராட்டம் முடிந்தவுடன், அடுத்த கட்ட போராட்டத்தைப் பற்றி நாங்கள் சிந்தித்துக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில், சென்னையில் உள்ள ஒரு தமிழர் அமைப்பிடம் இருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. நீங்கள் திடீரென அறிவித்து நடத்திய போராட்டம் எங்களுக்குத் தெரியாமல் போய்விட்டது, செய்திகளைப் பார்த்தே தெரிந்துகொண்டோம். இதுபற்றி முன்பே தெரிந்திருந்தால் ஹைதராபாத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் அரசியல் முதுகலை பிரிவை எடுத்துப் படித்துக் கொண்டிருக்கும் தமிழ் மாணவர்களை உங்களது போராட்டத்தில் கலந்துகொள்ள வைத்திருப்போம். அவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். போராட்டத்தை ஒருங்கிணைக்க அவர்களும் சரியான இளைஞர்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்றார்.

அதோடு, தனித் தெலுங்கானாவிற்காக போராடிக் கொண்டிருந்த ஒரு பல்கலைக் கழக மாணவர்களையும், தமிழ் மாணவர்கள் போராட்டத்திற்காக அழைத்து வருவார்கள் என்றார் தொலைபேசியில் என்னோடு உரையாடிய அந்தப் பெண். அடுத்த கட்ட போராட்டம் இன்னும் வலுவாக இருக்க வேண்டும் என்று கருதியதால், அவர் கூறிய யோசனையை ஒப்புக்கொண்டேன். அந்த தமிழ் மாணவர்களோடு பேசலாம் என்று நானும் எனது நண்பனும் தீர்மானித்தோம்.

சில முறை கைபேசி உரையாடல்களுக்குப் பிறகு, அந்த தமிழ் மாணவர்கள் எங்களை நேரில் சந்தித்து போராட்ட வடிவம் பற்றி பேச அழைத்தார்கள். நாங்கள் இருவரும் அவர்களின் கல்லூரி வளாகத்திற்கு அன்றிரவு போனோம். அன்று அவர்களது கல்லூரி ஆண்டுவிழா வெகு விமர்சியாக நடந்துகொண்டிருந்தது. அவர்களோடு பேசினோம். அரசியல் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களுக்குப் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் அவர்கள். நல்ல அரசியல் அறிவு இருந்ததை உணர முடிந்தது.

இரண்டு மணிநேர உரையாடல். அடுத்த கட்ட போராட்டத்திற்கு குறைந்தது 3000 மாணவர்களை நாங்கள் அழைத்து வருகிறோம். இந்தியா மிகவும் அறிந்த எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான அருந்ததிராயை போராட்டத்திற்கு அழைக்கிறோம். அவர் எங்களுக்கு நல்ல பழக்கமானவர். நாங்கள் அழைத்தால் வருவார் என்று அந்த மாணவர்கள் கூறினார்கள். போராட்டத்திற்கு மாணவர்களைத் திரட்டுவது எங்களது பொறுப்பு, ஒருகிணைப்பை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்கள்.

3000 மாணவர்கள், அருந்ததிராய் என்றெல்லாம் அவர்கள் கூறியபோதே அவர்கள் மேலிருந்த நம்பிக்கை சற்று குறைய ஆரம்பித்தது. இருந்தாலும் இவர்களின் எண்ணம் என்னவாக இருக்கும் என்று புரிந்துகொள்ள அவர்களோடு இன்னும் சற்றுநேரம் நேரத்தைக் கழிக்க முடிவு செய்தோம். எங்களது சந்தேகத்திற்கு வலுச்சேர்க்கும்விதமாக அவர்களின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் அமைந்தது.

அது பல்கலைக்கழக ஆண்டுவிழா. அந்த நிகழ்ச்சி ஒரு புறம் நடந்துகொண்டிருக்க, யாரும் இல்லாத மைதானத்திற்கு எங்களை அழைத்துச் சென்றார்கள். சாப்பாடு வரவழைத்து சாப்பிட்டுக்கொண்டே, நீண்ட நேரம் பேசினோம். தங்கள் கல்லூரி, அதன் கலாச்சாரம் என்று பேச ஆரம்பித்தவர்கள், மது வாங்கி வந்து குடித்துக் கொண்டே, அங்குள்ள பெண்களைப் பற்றி கேவலமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். போதையில் அவர்கள் பேசியதை கேட்கும்போது அவர்கள் கஞ்சா போன்ற மற்ற போதைப் பொருட்களை உபயோகிப்பவர்கள் என்று வெளிப்படையாகவே தெரிந்தது.

குடித்துக் கொண்டிருந்த மது தீர்ந்துவிடவே, மது வாங்க எனது வண்டியைக் கேட்டார்கள். மணி எப்படியும் குறைந்தது இரவு பன்னிரண்டு இருக்கும். குடித்திருக்கும் ஒருவனிடம் எனது வண்டியை அந்த நேரத்தில் கொடுக்க எனக்கு உடன்பாடில்லை. அதனால், நானே அவர்களோடு போனேன். மூடி இருந்த மதுக்கடையின் பின்வாசல் வழியாக எனது பணத்தையும் போட்டு, மது வாங்கிக் கொடுக்கவேண்டிய சூழ்நிலையெல்லாம் உருவானது. திரும்பி வந்தபிறகு எனது நண்பனிடம் நடந்தவற்றைக் கூறினேன். உடனே அந்த இடத்தைவிட்டு வெளியேறுவது என்று தீர்மானித்தோம்.

அவர்களோடு பேசியதில் எங்களால் ஒன்றைத் தெளிவாக புரிந்ததுகொள்ள முடிந்தது. அவர்களுக்கு ஈழ அரசியல் வரலாறு தெரியும். ஆனால் அவர்கள் படும் வழிகளைப் பற்றிக் கவலையில்லை. அவர்கள் உதவித்தொகையில் படிக்கும் மாணவர்கள் என்பதால், IT யில் வேலை செய்து கொண்டிருக்கும் எங்களைப் பயன்படுத்திக்கொண்டு, தங்களை முன்னிறுத்திக் கொள்ள நினைத்தார்கள். அதன்மூலம் விளம்பரம் தேடவோ அல்லது அவர்களுக்கு கொடுத்த ப்ரொஜெக்டை முடிக்க வேண்டும் என்பதோ அவர்களின் எண்ணமாக இருந்தது.

அவர்களின் வார்த்தையில் மனிதாபிமானமோ, இது செத்துக்கொண்டிருக்கும் மக்களுக்கான போராட்டம் என்ற குறைந்த பட்ச அக்கறையோ இருந்ததாகத் தெரியவில்லை. தமிழக அரசியல் கட்சிகளுக்கும் இந்த மாணவர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை என்பது தெளிவாகப் புரிந்தது. அன்று இரவு அவர்களோடு தங்கச் சொல்லி எங்களை வற்புறுதினார்கள். போராட்டத்தைப் பற்றி பிறகு பேசலாம் என்று சொல்லிவிட்டு, அந்த இடத்தைவிட்டு வெளியேறினோம்.

அடுத்த ஒரு வாரத்திற்கு அந்த மாணவர்களும் இருந்து மீண்டும் மீண்டும் தொலைபேசி அழைப்பு, நான் எடுக்கவில்லை. சென்னையில் இருக்கும் அந்த தமிழர் அமைப்பு என்னை மீண்டும் அழைத்து அவர்களிடம் பேசினீர்களா என்று கேட்டார்கள். இந்த மாணவர்கள் எப்படியானவர்கள் என்பது அவர்களுக்குத் தெரியாதா, இல்லை பரஸ்பர ஒப்பந்தத்தோடு விளம்பரத்திற்காக அவர்கள் வேலை செய்தார்களா என்பதெல்லாம் தெரியவில்லை. அதனால் அந்த தமிழர் அமைப்பிடம் இந்த மாணவர்களின் எண்ணங்களைப் பற்றி எதுவும் பேசாமல் வேறுசில காரணங்களைச் சொல்லிவிட்டு அவர்களது வட்டத்திற்கும் இருந்து வெளியேறினோம். ஆனால் தமிழர்களுக்கு முதல் எதிரி தமிழன் தான் என்று வரலாறு நமக்குச் சொல்லித் தந்ததை இவர்கள் மீண்டும் ஞாயபகப்படுத்தினார்கள்.

நாங்கள் நடத்திய முதல் போராட்டத்தில் ஆயிரக்காணக்கான மக்கள் கலந்துகொள்ளவில்லை என்றாலும், அது மிகவும் கண்ணியமாக, உணர்வுப் பூர்வமாக நடந்த ஒன்று. இவர்களை அழைத்து, அடுத்த போராட்டத்தை நடத்தி, அப்பாவி ஆத்மாக்களை நாங்கள் கொச்சை
ப்படுத்த விரும்பவில்லை. அதனால் தவிர்த்து விட்டோம். இந்த சம்பவத்தைப் பற்றி அப்போது நான் எழுதவுமில்லை. 

அப்போதே எழுதவேண்டியதானே ? இப்போது எதற்கு இந்த கட்டுரை என்று நீங்கள் கேட்கலாம். ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக, பல தமிழ் மாணவர்கள் உயிரின் விளிம்புவரை சென்று போராடிக்கொண்டிருந்த காலகட்டத்தில், இப்படி ஒரு கட்டுரை எழுதினால் தமிழ் மாணவர்கள் சமுதாயத்தையும் அவர்கள் நடத்தும் போராட்டத்தையும் தவறான கண்ணோட்டத்தில் காட்டும் என்ற ஐயம் எனக்குள் இருந்ததால், சூழ்நிலை கருதி அப்போது தவிர்த்துவிட்டேன்.

ஆனால் இதை எழுதாமல் விட்டுவிட்டால், தமிழ் நாட்டில் ஈழ வியாபாரம் செய்ய, இப்படி ஒரு மாணவர் சமுதாயமும் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பதிவு செய்யாமல் போய்விடும் என்ற எண்ணத்தால் இப்போது பதிவு செய்கிறேன். நன்றி !

அகல்

1.9.2014

No comments:

Post a Comment