Sunday 3 March 2013

பெண்களுக்கு சம உரிமை கொடுங்க ஆனா ஆண்களின் உரிமைய பறிக்காதிங்க !

வணக்கம் !

கட்டுரையின் நோக்கம் என்ன ?


முன்னோர்கள் வாழ்ந்த காலம் முதல் இன்றைய கணினி யுகம் வரை, தொன்றுதொட்டு பெண்களுக்கான உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது என்பது அனைவரும் அறிந்ததே. கிராமப் புறங்களில் இது போன்ற நிலைகள் இன்னும் தொடந்தாலும் நகர்ப்புறங்களில் ஆண்களுக்கு இணையானவர்கள் பெண்கள் என்பதை நிருபித்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல் பெண்களின் சம உரிமையை நிலை நிறுத்தவும், அவர்களின் பாதுகாப்பிற்காகவும் அரசும் பலவிதமான சட்டங்களை கொண்டு வந்தவண்ணம் உள்ளது.

பெண்களின் சுய உரிமைகள் மறுக்கப்பட்ட நேரங்களில் அதைத் தட்டிக்கேட்டும், ஆண்களுக்கு நிகராக பெண்களும் நடத்தப்பட வேண்டும் என்றும் குரல் கொடுத்து போராடியவர்களில் பெரும்பாலானோர் ஆண்களே. இந்தப் புரட்சியை நமது தமிழ்கவி பாரதி முதல் இன்றைய தலைமுறை ஆண்கள் வரை பெண்களுடன் சேர்ந்து முன்னெடுத்துச் சென்ற வண்ணம் உள்ளனர் என்பதை எவரும் மறுக்க இயலாது. ஆரோக்கியமான இது போன்ற போராட்டங்கள் கண்டிப்பாக வரவேற்கப்பட வேண்டியவையே !

அதே வேளையில், பெண்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்ற எண்ணத்தில் அரசு/தனியார் துறைகள்/நிறுவனங்களில் கொண்டுவரப்படும் சில விதிமுறைகள்/சட்டங்கள் என்னவோ ஆண்களின் உரிமையை பரிப்பதாகவோ அல்லது அவர்களின் உணர்வுகளை நசுக்குவதாகவோ உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்வது அவசியமாகிறது. பெண்களுக்கு தரப்பட்டு ஆண்களுக்கு மறுக்கப்படும் அப்படியான ஒரு உரிமையைப் பற்றியே இங்கு தெரிந்து கொள்ள இருக்கிறோம்.


நடந்தது என்ன ?


எனது நெருங்கிய நண்பர் ஒருவர், கோயம்புத்தூரில் தனது மனைவியுடன் வசிக்கும் தனது நான்கு மாதக்குழந்தையின் உடல் நலக்குறைவால் அவசரமாக ஹைதராபாத்தில் இருந்து அன்றே கோவை செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். இரண்டு தனியார் பேருந்து நிறுவனங்கள் ஹைதராபாத்தில் இருந்து கோவைக்கு தினசரி பேருந்து சேவையை அளித்துக்கொண்டு வருகிறது. மொத்தம் நான்கு பேருந்துகள்.

வார இறுதி மற்றும் பண்டிகை நாள் நெருக்கம் என்ற அப்போதைய சூழ்நிலையால், துரதிஷ்டவசமாக மூன்று பேருந்துகள் நிரம்பிவிட்டன. ஆனால் நான்காவது பேருந்தில் ஒரே ஒரு காலி இடம் இருந்தது. அந்த காலி இடத்திற்கு பக்கத்து இருக்கையை முன்னரே ஒரு பெண் முன்பதிவு செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலின் அந்த இடத்தை அவர் முன்பதிவு செய்ய முற்பட்டார்.

பக்கத்து இருக்கையை
முன்னரே பதிவு செய்திருப்பது ஒரு பெண் என்ற காரணத்தால், காலி இடத்தை முன்பதிவு செய்ய அந்த பேருந்தின் இணையதளம் அனுமதிக்கவில்லை. மற்றும் அவர்கள் கொடுக்கும் பாப் அப் செய்தி. "Selected Seats(X) are adjacent to ladies Seat. Please select different Seats". ஆனால் இருப்பது ஒரே ஒரு இடம் தான். வேறு இருக்கையை தெரிவு செய்ய காலி இடங்களும் இல்லை. அந்த இணைய தளத்தின் ஸ்க்ரீன் சார்ட்டை உங்களின் பார்வைக்காக எடுத்துக் கொடுத்துள்ளேன் (எடுத்துக்காட்டிற்காக).




அதே வேளையில், ஒரு இருக்கையை முன்பதிவு செய்தது ஒரு ஆண் என்றும், அதன் பக்கத்து இருக்கையை பதிவு செய்யப்போவது ஒரு பெண் என்றால்,
அந்த பெண்ணிற்கு அந்த இருக்கையை பதிவு செய்ய அனுமதிப்பதோடு மட்டுமில்லாமல் இவ்வாறாக ஒரு பாப் அப் செய்தி கொடுக்கப்படுகிறது "Management reserves the right to readjust/change seat numbers, especially beside lady passengers. Non Cooperative passengers will be denied boarding". அந்த ஸ்க்ரீன் ஷாட் உங்களுக்காக கீழே.




இந்த பாப் அப் செய்தி கூட, முன்னரே முன்பதிவு செய்த ஆண்களை எச்சரிக்கும் விதமாக அமைந்துள்ளதே தவிர இது பெண்களுக்கான எச்சரிக்கை செய்தி அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.


இதன்மூலம் நாம் தெரிந்து கொள்வது என்ன ?



ஒரு ஆண் பதிவு செய்த இருக்கைக்கு அருகில் பெண் பதிவு செய்தால், ஆண்களை எச்சரித்து அந்த பெண்ணிற்கு அந்த இருக்கையை பதிவு செய்ய அனுமதிப்பதும், ஒரு பெண் பதிவு செய்த இருக்கைக்கு அருகில் ஆண் பதிவு செய்தால் அந்தப் பதிவை நிராகரிப்பதும், எதோ ஆண்கள் வர்க்கமே மோசமானது என்ற கண்ணோட்டத்தில் உள்ளது. இது முற்றிலும் ஆண்களை அவமதிப்பதாகவே இருக்கிறது. இது மிகவும் கண்டனத்திற்குரியது.

அதோடு இல்லாமல், அந்த நேரத்தில் ஹைதராபாத்தில் இருந்து கோவைக்கு வேறு பேருந்துகள் கிடையாது. விமானத்தில் உடனே பதிவு செய்து போக வேண்டுமானால் காலி இடங்கள் இருக்க வேண்டும். அப்படியே இருந்தாலும் 8 முதல் 10 ஆயிரம் செலவு செய்யவேண்டும் இது அனைவராலும் இயலாத ஒன்று. ரயிலில் உடனே செல்வது சாத்தியமற்றது.
இந்த குறிப்பிட்ட சூழலில், உடல் நிலை சரியில்லாத தனது மகளைப் பார்க்கமுடியாமல் தவிக்கும் ஒரு தந்தையின் மனநிலை எப்படி இருக்கும் ? கணவனை கூட வைத்துக்கொள்ள முடியாத ஒரு மனைவியின் மனநிலை எப்படி இருக்கும் ?


உடனே டிக்கெட் கிடைத்தாலும் அடுத்தநாள் தான் ஊர் போக முடியும். அது கிடைக்காததால் இன்னும் ஒருநாள் தாமதமாகும். இதே நிலை அடுத்த நாளும் தொடர்ந்தால், மீண்டும் இதே சூழலுக்கு ஒரு ஆண் தள்ளப்படுவான். இந்தச் செயல் பெண்களைப் பாதுகாக்கிறோம் என்கிற பெயரில் ஆண்களை முற்றிலும் அவமதிப்பதாகவும் அவர்களின் உரிமையை பறிப்பதாகவும் இல்லையா ? ஆண்களை அனைவரும் மோசமானவர்கள், பெண்கள் அனைவரும் சரியானவர்கள் என்ற இந்தப் பார்வை சரியா ?

பேருந்தில் ஒரு பெண்ணிற்கு உகந்த இடம் கிடைக்காத பட்ச்சத்தில், தங்கள் இருக்கையை மாற்றிக் கொடுத்து அவர்களுக்கு உதவுவது பெரும்பாலும் ஆண்களே. இதை யாராலும் மறுக்க முடியாது. அப்படி இருக்க ஆண்களை இப்படி ஒரு பார்வையில் சித்தரிப்பது அநாகரிகம் இல்லையா ?. இது ஒரு சிறு உதாரணமே. சாதாரண பேருந்து முதல் பல அரசு அலுவலகங்கள் வரை இது போன்ற நிலை தொடர்கிறது.

ஆகையால் ஆண்களுக்கு கொடுக்கப்படும் அத்தனை உரிமைகளையும் பெண்களுக்கு கொடுங்கள். ஆனால் பெண்களுக்கு நல்லது செய்வதாய்ச் சொல்லிக்கொண்டு எக்காரணத்தைக் கொண்டும் ஆண்களின் உரிமைகளைப் பறிக்காதீர்கள்.

பெண்கள் அனைவரும் நல்லவர்களுமல்ல, ஆண்கள் அனைவரும் கெட்டவர்களுமல்ல !

குறிப்பு: நண்பர்கள் யாரேனும் இது போன்று செயல்களால் பாதிக்கப்பட்டிருந்தால் அதைப் பின்னூட்டத்தின் (கமெண்ட்) மூலம் தெரியப்படுத்த வேண்டுகிறேன். இது மறுக்கப்படும் ஆண்களின் உரிமைகளைப் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பாக இருக்கட்டும்.

நன்றி !

அன்புடன்,
அகல்

14 comments:

  1. ம்ம் சரியான நேரத்தில் எழுதப்பட்ட சரியான கட்டுரை..சில எழுத்துப்பிழைகளை சரி செய்து விடுங்கள். "கெட்டவர்கள் " என்பதுக்கு " கேட்டவர்கள் " என்று இருக்கிறது.

    சரி விடயத்துக்கு வருவோம்.ஆம்,பெண்ணுரிமை னா என்னவென்று தெரியாமலே பெண்ணை பாதுகாக்கறோம்னு ரொம்ப தான் அநியாயம் பண்றாங்க.

    நான் சென்னையில் சில நாட்கள் இருக்கையில், பேருந்தில் சென்று இருக்கிறேன் .அது ஏனோ hello Mr இது ladies seat என்று ஆண்களை தான் எழுப்பி விடுகிறார்களேத் தவிர ஒரு ஆண்மகன் கூட hello Miss or Mrs இது gents seat என்று எழுப்பியதை நான் பார்த்ததே இல்லை.

    நல்ல வேலை,எங்க ஊருலலாம் இன்னும் gents seat, ladies seat வருல.

    போற போக்கப் பாத்தா, we need 70% என்று ஆண்கள் உரிமைக்கு போராடும் நிலை வராமல் இருந்தால் சரி.

    ReplyDelete
    Replies
    1. எழுத்துப்பிழையை மேற்கோள் காட்டியதற்கு நன்றிகள் ஆதிரா.. ஆம் உண்மைதான் அந்த நிலை வந்தாலும் வரலாம்..

      Delete
  2. \\ஒரு ஆண் பதிவு செய்த இருக்கைக்கு அருகில் பெண் பதிவு செய்தால், ஆண்களை எச்சரித்து அந்த பெண்ணிற்கு அந்த இருக்கையை பதிவு செய்ய அனுமதிப்பதும், ஒரு பெண் பதிவு செய்த இருக்கைக்கு அருகில் ஆண் பதிவு செய்தால் அந்தப் பதிவை நிராகரிப்பதும், எதோ ஆண்கள் வர்க்கமே மோசமானது என்ற கண்ணோட்டத்தில் உள்ளது.\\

    ஐயா என்ன இப்படியெல்லாம் கிளம்பிட்டீங்க, இப்படியெல்லாம் கிளம்பினா நாடு தாங்காதய்யா.........தாங்காது. அவர்கள் எடுத்த முடிவு "ஆண்கள் வர்க்கமே மோசமானது" என்பதால் அல்ல, ஆண்கள் வர்க்கத்தில் மோசமானவர்களும் இருக்கிறார்கள் என்பதால் தான். கூட உட்கார்ந்து செல்லும் இளைஞர்களின் கொட்டையைப் பிடித்து நசுக்கும் கிழவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று தெரியுமா உமக்கு? இந்த லட்சணத்தில் அந்த இடத்தில் ஒரு பெண் இருந்தால் என்ன நிகழும்? ஒருவேலை உட்காருபவர் நல்ல மனிதனாய் இருந்தால் பரவாயில்லை, ஆனால் அவர் சில்மிஷக்காரனாய் இருக்கமாட்டார் என்று யார் உறுதி கொடுப்பது. உங்கள் நண்பர் நல்லவர் என்ற விஷயம் டிக்கட் முன்பதிவு மையத்திற்கு கணினியின் மூலமாகத் தெரியுமா என்ன? அந்த பெண் உங்க மனைவியோ தங்கையாகவோ இருந்தால் உங்களுக்கு பிரச்சினையின் தீவிரம் புரியும் என நினைக்கிறேன். உங்க நண்பருக்கு நேரும் அவரசரத்திற்கு போக்குவரத்து நிர்வாகம் எந்த விதத்திலும் பொறுப்பாகாது. ஒருவேளை அந்த ஒரு சீட்டும் புக் ஆகியிருந்தால் உங்க நண்பர் என்ன செய்திருப்பார்? யோசியுங்க!! உங்கள் பதிவில் துளிகூட நியாயம் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. // ஐயா என்ன இப்படியெல்லாம் கிளம்பிட்டீங்க, இப்படியெல்லாம் கிளம்பினா நாடு தாங்காதய்யா // இப்படி உங்களுக்கு தெரிவதற்காக நான் ஏதும் செய்ய இயலாது...

      // ஒருவேளை அந்த ஒரு சீட்டும் புக் ஆகியிருந்தால் உங்க நண்பர் என்ன செய்திருப்பார்? யோசியுங்க!! //


      என் நண்பர் என்ன செய்வார் என்று எனக்கு நன்றாகத் தெரியும்.. உங்களுக்கு ஏதும் சில்மிஷம் செய்த அனுபவத்தால் இப்படி பேசுகிறீர்களா என்று எனக்கு தெரியவில்லை. முதலில் சம உரிமை என்றால் என்ன என்பதையும் உங்களைபோல் அனைவரும் இருக்க மாட்டார்கள் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள். உங்களது பின்னூட்டம் வக்கிரமான சிந்தனையைக் காட்டுகிறதே தவிர சுத்தமான எண்ணத்தையல்ல.. ஒருவரைப்பற்றி சற்றும் தெரியாமல் நீங்கள் தரும் இந்த கீழ்த்தரமான பின்னூட்டத்தில் இருந்து நீங்களும் உங்கள் சிந்தனையும் எவ்வளவு அருமையாக பக்குவத்துடன் இருக்கிறது என்பது நன்றாகத் தெரிகிறது. எனது நண்பனைப் பற்றி பேச உங்களுக்கு துளியும் தகுதில்லை என்பதை நான்கே வரிகளில் நிரூபித்தமைக்கு மிக்க நன்றி..

      Delete
  3. \\உங்களுக்கு ஏதும் சில்மிஷம் செய்த அனுபவத்தால் இப்படி பேசுகிறீர்களா என்று எனக்கு தெரியவில்லை. \\ நான் சொல்ல வந்ததை நீங்கள் வேறு விதமாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள். அனுபவம் எனக்கு மட்டுமல்ல, பலருக்கும் நடந்திருக்கிறது. அதை விட்டுத் தள்ளுங்கள், சென்னையில் பகலில் ஓடும் நகரப் பேருந்துகளில் பெண்கள் மட்டும் பேருந்துகள் எதற்கு? உள்ளூர் ரயில்களில் பெண்கள் மட்டும் பெட்டி எதற்கு? முன்பு ஒரு சமயத்தில் பேருந்தை பாதியாக கம்பிவலை போட்டு பிரித்து ஒருபுறம் பெண்களும், இன்னொரு புறம் ஆண்களும் பயணம் செய்யுமாறும் செய்தார்கள். இப்படியெல்லாம் நடக்கும் காலத்தில் யாரோ தெரியாத ஒரு ஆணுடன் ஒரு பெண் எப்படி பக்கத்தில் அமர்ந்து அதுவும் இரவில் பயணம் செய்வாள்? உங்கள் நண்பர் நல்லவராக இருக்கலாம், ஆனால் நல்லவர்களுக்காக ஒரு ரூல், சிமிஷக்காரர்களுக்காக ஒரு ரூல் என்று போட முடியாது. உங்கள் நண்பரைப் பற்றி நான் எதுவுமே சொல்லாத நிலையில் அவரைப் பற்றி மட்டமாகச் சொன்னதாக நீங்கள் ஏன் மீது அபாண்டமாகப் பழி போடுவது துரதிர்ஷ்டம்.


    \\முதலில் சம உரிமை என்றால் என்ன என்பதையும் உங்களைபோல் அனைவரும் இருக்க மாட்டார்கள் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள். உங்களது பின்னூட்டம் வக்கிரமான சிந்தனையைக் காட்டுகிறதே தவிர சுத்தமான எண்ணத்தையல்ல.\\ இதையெல்லாம் பயணிக்கும் அந்தப் பெண் தீர்மானிக்க வேண்டியது. அவஸ்தை உமக்கோ எனக்கோ அல்ல. அதிகம் வண்டாம் உங்கள் வீட்டுப் பெண்களை யாரோ தெரியாத நபருடன் அமர்ந்து இரவில் நெடுந்தூரம் பயணிக்க அனுமதிப்பீரா?

    ReplyDelete
    Replies
    1. // சென்னையில் பகலில் ஓடும் நகரப் பேருந்துகளில் பெண்கள் மட்டும் பேருந்துகள் எதற்கு? உள்ளூர் ரயில்களில் பெண்கள் மட்டும் பெட்டி எதற்கு? // இது பெண்களை ஊக்குவிக்க அவர்களுக்கு சாதகமாக செய்யப்பட்ட வசதியே தவிர ஆண்கள் அவர்களைப் பலவந்தப் படுத்துவார்கள் என்றல்ல..

      // முன்பு ஒரு சமயத்தில் பேருந்தை பாதியாக கம்பிவலை போட்டு பிரித்து ஒருபுறம் பெண்களும், இன்னொரு புறம் ஆண்களும் பயணம் செய்யுமாறும் செய்தார்கள். இப்படியெல்லாம் நடக்கும் காலத்தில் யாரோ தெரியாத ஒரு ஆணுடன் ஒரு பெண் எப்படி பக்கத்தில் அமர்ந்து அதுவும் இரவில் பயணம் செய்வாள்? //

      இப்போதைய நிலை என்ன ?

      // இதையெல்லாம் பயணிக்கும் அந்தப் பெண் தீர்மானிக்க வேண்டியது // பயணிக்கும் பெண் மட்டும் நல்லவளாக இருப்பாள் என்பதை யார் தீர்மானிப்பது ? பல பள்ளி ஆசிரியைகள், 10-15 வயது மானவங்களை ஏமாற்றி, வற்புறுத்தி வல்லுறவு கொண்ட கதைகள் ஏராளமாய் உள்ளது என்பதை செய்தித்தாள்களின் மூலம் தெரிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்..

      // உங்கள் நண்பரைப் பற்றி நான் எதுவுமே சொல்லாத நிலையில் அவரைப் பற்றி மட்டமாகச் சொன்னதாக நீங்கள் ஏன் மீது அபாண்டமாகப் பழி போடுவது துரதிர்ஷ்டம். //

      உங்களது முதல் பின்னூட்டத்தில் நீங்கள் கீழே கூறியவாறு சொன்னதின் பொருள் என்னவோ ?

      // ஒருவேளை அந்த ஒரு சீட்டும் புக் ஆகியிருந்தால் உங்க நண்பர் என்ன செய்திருப்பார்? யோசியுங்க!!//

      // அதிகம் வண்டாம் உங்கள் வீட்டுப் பெண்களை யாரோ தெரியாத நபருடன் அமர்ந்து இரவில் நெடுந்தூரம் பயணிக்க அனுமதிப்பீரா? //

      இது பத்தாம் நூற்றாண்டல்ல... இப்படியான ஒரு சுழலில் வரும் நிலைக்குத் தள்ளப்பட்டேன் என்று ஒரு பெண் சொல்வதை புரிந்து கொள்வபவன் தான் உண்மையான ஆண்.. சந்தேகப்பார்வை பார்ப்பவனுக்கும் தனது வீட்டு பெண் மீதே நம்பிக்கை இல்லாதவனும் வேண்டுமானால் வேறு விதமாக சிந்திக்கலாம்..

      Delete

  4. \\இது பத்தாம் நூற்றாண்டல்ல... இப்படியான ஒரு சுழலில் வரும் நிலைக்குத் தள்ளப்பட்டேன் என்று ஒரு பெண் சொல்வதை புரிந்து கொள்வபவன் தான் உண்மையான ஆண்.. சந்தேகப்பார்வை பார்ப்பவனுக்கும் தனது வீட்டு பெண் மீதே நம்பிக்கை இல்லாதவனும் வேண்டுமானால் வேறு விதமாக சிந்திக்கலாம்.\\ உங்க கிட்ட பேசி பிரயோஜனமில்லை. ஒன்னு பண்ணுங்க, வலுக்கட்டாயமா தெரியாத ஆடவர்களுடன் உங்க வீட்டுப் பெண்களை பயணம் செய்ய வையுங்க, அப்புறம் கேட்டுத் தெரிஞ்சுக்குங்க. [அதை நீங்க செய்ய மாட்டீங்க, அந்த தைரியம் உங்களுக்கே கிடையாது, இது தான் நிதர்சனம்.]

    ReplyDelete
    Replies
    1. நான் என்ன செய்வேன், என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கவோ சொல்லவோ உங்களுக்கு உரிமை இல்லை... முதலில் உங்கள் சிந்தனையைச் சற்று சுத்தப் படுத்துங்கள் எல்லாம் சரியாகிவிடும்..

      Delete
  5. தனிமனித ஒழுக்கம் என்பது இன்றைக்கு மறைந்து வரக்கூடிய ஒன்று... இதில் ஆணென்ன...? பெண்ணென்ன...?

    ஒரு சில பேர்கள் செய்யும் தவறுகளால் நடக்கும் நிகழ்வுகளே இவை... சில என்பது பல என்று மாறி விட்டதால் தான் "பாப் அப் செய்தி"

    மாற வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. // ஒரு சில பேர்கள் செய்யும் தவறுகளால் நடக்கும் நிகழ்வுகளே இவை... // இதுவே எனது கருத்தும்... இதில் ஆண் பெண் சதவீதங்கள் வேண்டுமானால் வேறுபடலாம்.. ஆனால் ஒரு சில நிகழ்வுகளை வைத்து ஆண்கள் அனைவரும் தவறானவர்கள் என்றோ பெண்கள் சரியாக இருப்பார்கள் என்றோ ஒரு நிலைப்பாட்டிற்கோ வருதல் இயலாது..

      Delete
  6. \\நான் என்ன செய்வேன், என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கவோ சொல்லவோ உங்களுக்கு உரிமை இல்லை..\\ அதற்காக பொய்யை விதிக்கக் கூடாது. நாம் நீங்கள் செய்துதான் ஆகவேண்டும் என்று எதையும் சொல்லவில்லை அதை யோசித்தாலே போதும், நீர் சொல்வதில் உள்ள பிக்காலித் தனம் விளங்கிவிடும்

    \\முதலில் உங்கள் சிந்தனையைச் சற்று சுத்தப் படுத்துங்கள் எல்லாம் சரியாகிவிடும்.. \\ இப்பத்தானே சொன்னீங்க, நீங்க என்ன செய்யணும் என்று சொல்லும் உரிமை எனக்கில்லை என்று, அப்படியே நீங்க நான் என்ன பண்ணும்னு சொல்ல ஆரம்பிச்சுட்டீங்களே?!! இதுதான் முரண் என்பது. திருந்துங்கய்யா............. திருந்துங்க..........

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் அமைக்கும் வாக்கியத்தில் இருந்தே நன்கு தெரிகிறது உங்களால் எவ்வளவு நாகரீகமாக உரையாட முடியும் என்று.. நன்றி ...

      Delete
  7. ம்ம் சிந்திக்க வேண்டியதுதான். சில பேருந்துகளில் ஒரு ஆணும் பெண்ணும் இணையாக வந்தால் அவர்கள் ஒன்றாக அமர்ந்து பயணிக்க விரும்புவார்கள், அதனால் நான் கூட எனக்கென்று ஒதுக்கப்பட்ட சாளரத்தின் அருகிலிருக்கும் இருக்கையை விட்டு வேறு இடத்திற்கு மாறியிருக்கிறேன். இது போன்ற விதிகள் இருக்கக் காரணம் சில முன்னேச்சரிக்கைகள்தானே தவிர அது ஆண்களை அவமானப்படுத்துவதாகவெல்லாம் கருதத் தேவையில்லை என்றே நினைக்கிறேன். அதை அப்படியே கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று வைத்திருக்கத் தேவையில்லை. பயணியின் நிலையைக் கருத்தில் கொண்டு அனுமதித்திருக்க வேண்டும். நிர்வாகிகள் அந்த பெண் பயணியிடம் கேட்டிருந்தால் கூட அவர் வேண்டாமென்றா சொல்லியிருக்கப் போகிறார்.

    ReplyDelete
    Replies
    1. ஆனால் இது கட்டாயமாக்கப்பட்டிருப்பது வறுத்தமளிக்கிறது.. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் தமிழானவன்...

      Delete