Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Thursday, 9 April 2015

20 கூலிகளின் கொலை

மரம் வெட்டுதல் என்பது தொழிலா ?

ஆம், கிராமத்து கூலித் தொழிலாளிகளைப் பொருத்தவரை மரம் வெட்டுவதென்பது ஒரு தொழில்தான். ஆனால் படித்த, நடுத்தர, மேல்தட்டு நகரவாசிகள் நினைப்பதுபோல அது சந்தனமரம், செம்மரம் வெட்டிக் கடத்துவதல்ல. உசிலை மரம், வேப்பமரம், புளியமரம் போன்றவற்றை விறகுக்காக வெட்டும் தொழில். இது தோட்டத்தில் பயிர்களுக்கு களை பறிக்க செல்வதுபோன்று அன்றாடம் நடக்கும் ஒரு தொழில். கிராமத்து பின்னணியில் இருந்து வந்தவர்களுக்கு இது நன்கு தெரியும்.
கொல்லப்பட்டவர்கள் கடத்தல்காரர்களா ?

இல்லை. கொல்லப்பட்டவர்கள் கூலித் தொழிலாளிகள். ஒரு மாநிலம் விட்டு மற்றொரு மாநிலத்திற்கு பிழைப்பிற்காக சென்றவர்கள். 200 ரூபாய் கூலி சொந்த ஊரில் கிடைகிறது. ஆனால் 400 ரூபாய் பக்கத்து மாநிலத்தில் கிடைக்கிறதென்றால் தங்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ள அந்த வேலையைத் தேடித் கூலிக்குப் போவதென்பது இயல்பு. இதை பேராசை என்று ஒருசாரர் சொல்வார்களேயானால், நல்ல சம்பளத்திற்கு வெளிமாநிலத்திற்கு வேலைக்குப்போகும் படித்த பட்டதாரிகளும் பேராசைக்காரர்கள் தானே ?

தமிழ்நாட்டின் பானிபூரி விற்க வடநாட்டில் இருந்து எதற்கு வருகிறான் ? அங்கு அவனுக்கு வேலை கிடைக்கவில்லை. அங்குள்ளோர் யாரும் பானிபூரி சாப்பிடுவதில்லை என்று அர்த்தமல்ல. இங்கு விற்பதில் அவனுக்கு சில நன்மைகள் இருக்கிறது. வாழ்க்கைத் தரத்தை உயர்த்தலாம் என்று அவன் நினைத்திருக்கலாம். அதை தவறு என்று யாரும் சொல்ல முடியாது.

வெட்டுவது செம்மரம், அது சட்டப்படிக் குற்றம் என்பதையெல்லாம் தெரியாதவர்கள், செம்மரங்களின் சர்வதேச மதிப்பு என்னவென்று தெரியாத அப்பாவிகளைத்தான் இந்த கடத்தலுக்குப் பின்னிருக்கும் பண முதலைகள் பயன்படுத்தி இருப்பார்கள். அனைத்து விவரமும் தெரிந்தவர்களை பணியமர்த்த அவர்கள் என்ன முட்டாள்களா ? உண்மையில் யோசித்திபோருங்கள், ஒரு டன் செம்மரம், சர்வதேசச் சந்தையில் ஒரு கோடியைக்கூட எட்டும் என்பது, படித்த எத்தனை பேருக்கு இதற்கு முன்பே தெரிந்திருக்கும் ?

மரம் வெட்டி இயற்கை வளத்தை அழிப்பதை நியாயப் படுத்தவில்லை. ஆனால், மரம் என்பது இயற்கை வளம், அதைப் பாதுகாப்பது அவசியம். மழைவர மரம் காரணம், அது நமது வாழ்வாதாரம் என்றெல்லாம் 200 ரூபாய் கூலிக்குபோகும், கல்வியறிவு கிடைக்கப்பெறாத, அதைப்பற்றி யோசிக்க முடியாத நிலையில், அன்றாட உணவிற்காக போராடும் எளிய மனிதர்களிடம் எதிர்பார்க்க முடியாது. ஆக, அவர்களின் வறுமையும் அறியாமையும் மட்டுமே இங்கே பயன்படுத்தப் பட்டிருக்கிறது. அவ்வளவே.
யார்தான் இதற்குக் காரணம் ?

வெளிமாநில ஆட்களை அழைத்து வந்து, ஒரு கொலை செய்வதில் அந்த கொலை செய்யும் கும்பலுக்கு என்னென்ன நன்மை இருக்கிறதோ, அதே போன்ற நன்மைகளுக்கத்தான் விவரம் தெரியாத, மொழி தெரியாத, வெளியாட்களை இறக்குமதி செய்து பணியமர்துகிறார்கள். இதே வேலையைச் செய்ய உள்ளூர்க்காரனை பயன்படுத்தினால் இந்த கும்பல் எளிதாகச் சிக்கும் என்று அவர்களுக்குத் தெரியாமலா போயிருக்கும் ? அதோடு 20 பேரை சுட்ட ஒரு படையால், ஒருவனைகூடவா உயிருடம் பிடிக்க முடியவில்லை ? இந்த கடத்தலின் பின் இருப்பவர்களை அடையாளம் காண முடியவில்லை ?

சுடப்பட்ட இந்த கூலித் தொழிலாளிகளா சர்வதேச சந்தையில் செம்மரங்களை விலைபேசி விற்கிறார்கள் ? ஆலமரத்தின் ஆணிவேரை விட்டுவிட்டு அதன் விழுதை வெட்டுவதால் என்ன பயன் ? இதற்குப் பின், மிகப்பெரும் ஆள் பலம், அரசியல் பலம் இருக்கிறது. அந்த முதலைகளை விட்டுவிட்டு இந்த கூலிகளைக் கொன்றது சரி என்று பேசுபவர்கள் அடிப்படை புரியாதவர்கள் என்றே பொருள் கொள்ளவேண்டும். ஒரு கூலியைச் சுட்டுவிட்டால் இன்னொரு கூலி வராமல் போகமாட்டான். செம்மரம் வெட்டியதாகச் சொல்லி, 20 பேர் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தியைக் கூட அறியாத கடைக்கோடி இந்திய குடிகள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். அவர்களை இந்த மாபியா கும்பல் மீண்டும் பணியமர்த்தும். அவர்களின் வறுமையை மீண்டும் பயன்படுத்தும்.

இங்கு ஏதோ ஒரு அரசியல் அழுத்தத்திற்காக, ஒரு சாராரை திருப்திப் படுத்துவதற்காக, ஒரு படுகொலை அரங்கேற்றப் பட்டிருக்கிறது, அப்பாவிகள் கொல்லப் பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. இதைப் புரிந்து கொள்ளாமல், கூலிகளின்மீது பழிசுமத்துவதில் குறியாகத் திரியும் ஒரு குறிப்பிட்டோரை நினைத்து, வருத்தப்பட மட்டுமே முடிகிறது. இதன் பின்னணியில் இருக்கும் பெரு முதலாளிகளைப் பற்றி இவர்களால் பேச முடியாதபோதே இவர்களின் நோக்கம் என்ன என்பது புரிந்துவிடும். இந்த அப்பாவிகளின் கொலைகளில்கூட, மனிதாபிமானமற்ற முறையில், சில மதவாதிகள் மதத்தைக் கொண்டு திணிக்கிறார்கள் என்பது உச்சகட்ட வேதனை !

அகல்
10.4.2015

Friday, 28 November 2014

வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன்.

நண்பர்களுக்கு வணக்கம். நீண்ட நாட்கள் கழித்து ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியோடு வலைப்பூ பக்கம் வந்துள்ளேன்.

"நான் அப்பாவானேன் நாங்கள் பெற்றோரானோம்"

ஆம், நவம்பர் 20 தேதியன்று எங்களுக்கு அமெரிக்காவின் சான்டியாகோ நகரில் குட்டி "வெண்பா" பிறந்திருக்கிறாள். இந்தக் குட்டிக் கால்களுக்கு நான் அப்பாவாகிவிட்டேன் (இது வெண்பாவின் புகைப்படம் தான்) இந்த செய்தியை முகநூலில் பகிர்ந்திருந்தேன். அதையொட்டி எனக்கும் என் நண்பனுக்கும் இடையே நடந்த ஒரு உரையாடலை இந்த மகிழ்ச்சியான செய்தியோடு உங்களோடு பகிர்ந்துகொள்ளவே இந்தப் பதிவு.

வாழ்த்துக்களோடு ஆரம்பித்த உரையாடலின் ஒரு பகுதி மட்டும் இங்கே.

நண்பன்: முகநூல் பதிவைப் பார்த்தேன். இரண்டு விடயங்களைக் கவனித்தேன். அதில் ஒன்று, வெண்பா எந்தவித சாதிய, மத அடையாளங்களின்றி வளர்வாள் என்பது. அதன் பொருள் என்ன ?

நான்: எந்தவித சாதிய அடையாளங்களும் இல்லாமல் வளர்வாள். மனதளவிலும், அவளது பிறப்பு, மற்றும் பள்ளி கல்லூரி சான்றிதல்கள் என எந்த ஒரு அரசு சான்றிதல்களிலும் சாதியோ, மதமோ குறிப்பிடப்பட மாட்டது.

நண்பன்: அதனால் அவளது எதிர்காலம் பாதிக்கப்படாதா ? நான் சொல்வது இட ஒதுக்கீட்டைப் பற்றி.

நான்: சுயநலமாக, குறுகிய கால பலனாகப்பார்த்தால் பாதிப்பு இருக்கலாம். ஆனால் இடஒதுக்கீடு என்ற ஒன்றை காலப்போக்கில் ஒழித்து, அனைவரும் சமம் என்ற ஒரு நிலையை சமுதாயத்தில் உருவாக்கவேண்டுமானால் இதுபோன்ற முன்னெடுப்புகள் இப்போதிருந்தே தேவைப்படுகிறது.

நண்பன்: கடவுள் நம்பிக்கையையும் மதத்தையும் பிரிக்கமுடியாது. அப்படி இருக்க, நீ மதத்தை மறைத்துவிட்டால் வெண்பா எந்தக் கடவுளை வழிபடுவாள் ?

நான்: நம்பிக்கையின்மையால் நான் எந்தக் கடவுளையும் வழிபடுவதில்லை. ஒருவேளை அவள் கடவுள் நம்பிக்கையோடு வளர்ந்துவிட்டால், அடுத்தவருக்கு தீங்கு விளைவிக்காதவாறு சிவன், ஏசு, அல்லா, புத்தர் என்று அவள் விருப்பப்படி யாரை வேண்டுமானாலும் வழிபடலாம். அது அவளது தனிப்பட்ட உரிமை.

நண்பன்: வாழ்த்துக்கள். எனது வட்டாரத்தில் எனக்குத் தெரிந்து சான்றிதழ்கள் உட்பட சாதியப் புறக்கணிப்பை உன் மகளுக்கு நீ மட்டும்தான் செய்திருக்கிறாய்.

நான்: இருக்கலாம் ஆனால் இது புதிதல்ல. பெரியார் வழிவந்தோர் பல வருடங்களாகச் செய்து கொண்டு வரும் காரியம் தான் இது. அதை இலகுவாக மற்றோர் அறியும்படி செய்ய அப்போது அவர்களுக்கு சமூக வலைதளங்களின் பயன்பாடுகள் கிடைக்கவில்லை. அதனால் தெரியாமல் போயிருக்கும்.

நண்பன்: இன்றைய படித்த இளைய தலைமுறையினர் சாதியை எதிர்க்கும் மனப்பான்மை கொண்டவர்களாகத்தானே இருக்கிறார்கள்.

நான்: ஓரளவிற்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்து என்றாலும், சாதிய எதிர்ப்புக்கும் சாதிய ஒழிப்புக்கும் வித்தியாசம் உண்டு. சாதிய எதிர்ப்பு என்பது சாதிய ஒழிப்பாக மாறாதவரை, இந்த கட்டமைப்பு மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் குடித்துக் கொண்டேதான் இருக்கும். அதனால் சாதிய ஒழிப்பு என்பது மிக முக்கியம்.

நண்பன்: பெருவாரியாக இல்லாவிட்டாலும், கடந்த சில தலைமுறைகளாக கலப்புத் திருமணங்கள் நடந்து கொண்டுதானே இருக்கிறது ?

நான்: உண்மைதான். ஆனால் கலப்புத் திருமணங்களின் மூலம் சாதிகள் ஒழிக்கப்படுவதில்லை என்பது என் கருத்து. காரணம், குழந்தை பிறந்தவுடன் அம்மாவின் சாதி அடையாளங்கள் புறக்கணிக்கப்பட்டாலும் அது அப்பாவின் சாதிய அடையாளங்களோடே வளர்கிறது என்பதுதான் எதார்த்தம்.

நண்பன்: எனது இரண்டாவது கேள்வி. வெண்பா என்ற பெயர் சுத்த தமிழ் வார்த்தையாகத் தெரிகிறது. ஆனால் பெரும்பாலானோர் சமஸ்கிருத பெயர்களைத்தானே வைக்கிறார்கள். நீ ஏன் அதைச் செய்யவில்லை ?

நான்: எப்படிப் பெயர் வைக்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். என்னைப் பொருத்தவரை, பசியாற தாராளமாக தாய்ப்பால் கிடைக்கும்போது, எனக்குப் புட்டிப்பால் வேண்டும் என்று தோன்றவில்லை.

நண்பன்: ஆனால் சம்ஸ்கிருத வார்த்தைகளின் உச்சரிப்பு அழகாக இருக்கிறதே.

நான்: இதுவும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட எண்ணம் தான். ஆனால் நீ சொல்வதுபோல் பெரும்பாலானோருக்கு அது இயற்கையாகவே அழகாகத் தெரியவில்லை மாறாக அழகாகத் தெரிய வைத்தார்கள். அதன் பின் மிகப்பெரும் மொழியரசியல் இருக்கிறது. அதைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், சில நூறு ஆண்டு வரலாற்றை ஓரளவிற்காவது புரட்ட வேண்டும்.

நண்பன்: சாதிய ஒழிப்பைப் பற்றி நீ இவ்வளவு பேசினாலும், நீயும் உனது சாதியைச் சார்ந்த பெண்ணைத்தானே திருமணம் செய்துகொண்டாய்.

நான்: உனக்கு யார் அப்படிச் சொன்னது ?

அகல்
28.11.2014 

Sunday, 21 September 2014

காதலறிந்த கடலலை

கடற்கரை
மணலில்

உன்னை
விருப்புகிறேன்
என்று எழுதுகிறேன்
நான்

உன்னை
வெறுக்கிறேன்
என்று எழுதுகிறாய்
நீ

கணநேர
மௌனத்திற்குப்
பிறகு

நீ எழுதியதைச்
சட்டென்று
அழித்துவிட்டுச்
செல்கிறது
கடலலை !


- அகல் 

சிறை

அந்திவானம்
இளம் தென்றல்
பூக்கள்
பறவைகள்
பட்டாம் பூச்சிகள்
மேகம்
மழை
நிலவு
நட்சத்திரங்கள்
மழலையின் சிரிப்பு
பருவப்பெண்கள்
யாவரும்

காலம் காலமாக
சிறைபட்டுக்
கிடக்கிறார்கள்
கவிஞர்களின்
பேனா நுனியில் !


 - அகல்

பொய்காரன்

எனது
ரயில் பயணத்தில்

அந்த ரயிலையும்
உன் நினைவுகளையும்
அன்றி
யாரையும்
நான் துணைக்கு
அழைத்து வரவில்லை
என்று சொல்லும்
என்னைப் பார்த்து

நீ ஒரு
உலகமாக
பொய்காரன்
என்கிறது

அந்த
ஜன்னல் வழி
இடைவெளியில்
மடிவிரித்துத்
தாலாட்டிய நிலவு !


- அகல்

Tuesday, 16 September 2014

சகாயம் IAS க்கு எதிரான மேல்முறையீடும் காரணங்களும்

தமிழகத்தில் நடக்கும் தாதுமணல் கொள்ளை, கிரனைட் முறைகேடுகளை விசாரித்து, இரண்டு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கலெக்டர் சகாயம் தலைமையில் சென்னை உயர்நீதி மன்றம் அமைத்த குழுவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இதற்கு தமிழக அரசு கூறும் விளக்கம், இதுவரை 88 கிரானைட் குவாரிகளுக்குக் கொடுக்கப்பட்ட குத்தகை ரத்து செய்யப்பட்டுள்ளது. முறைகேடாக நடத்தப்பட்ட குவாரிகளுக்கு எதிராக 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, கிரனைட் ஏற்றுமதியை நிறுத்திவிட்டோம் என்பதே அது.

மாநிலத்தில் நலனுக்காக அமைக்கப்பட்ட இந்தக் குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரசர அவசரமாக தமிழக அரசு ஏன் மேல் முறையீடு செய்துள்ளது ? குவாரிகளின் குத்தகை ரத்து செய்யப்பட்டாலும், வழக்குகள் பதியப்பட்டாலும் அதை மறு ஆய்வு செய்வதில் தமிழக அரசு ஏன் உடன்படவில்லை என்பதையும் இங்கே நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. தமிழக அரசிடம் எந்தக் கருத்தும் கேட்காமல் இந்தக் குழு அமைக்கப்பட்டது அரசை அவமதிப்பதுபோல் இருப்பதாக தமிழக அரசின் சார்பில் சொல்லப்பட்டாலும் அது ஒரு சப்பைக்கட்டு காரணமாகவே நம்மால் பார்க்க முடிகிறது.

தமிழக அரசால் குத்தகை ரத்து செய்யப்பட்ட குவாரிகள் யாருடையது என்ற பட்டியலையும், இப்போது குவாரிகளை நடத்துவோரின் பட்டியலையும் எடுத்தால் நமக்கு இதில் விடை கிடைக்கலாம். அதோடு, பாலாற்றுப் படுக்கையில் நடைபெற்ற முறைகேடுகளைப் பற்றியும், அதில் தமிழக அரசுக்கு ஏற்பட்ட இழப்பு பற்றியும், IAS அதிகாரி சகாயம் தமிழக அரசிடம் சமர்பித்த அறிக்கையில், யார் யாருடைய பெயர் இருந்தது என்ற பட்டியல் பெறப்பட்டாலும் இந்த மேல் முறையீட்டிக்குக்கான காரணங்கள் விளங்கிவிடும்.

சகாயம் அவர்கள், தாது மணல் கொள்ளை, கிரனைட் முறைகேடுகளைப் பற்றி நன்கு அறிந்தவர். அந்த முறைகேடுகளைப் பற்றியும் அதில் ஈடுபட்டோர் பற்றியும் முன்னரே ஆய்வு செய்தவர். முக்கியமாக மிகவும் நேர்மையானவர் என்பது தமிழக அரசுக்கு நன்கு தெரியும். அவரிடம் மீண்டும் இந்த வேலையை ஒப்படைத்தால் இன்னும் பல அயோக்கியத் தனங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவார். அந்த முறைகேடுகள் தமிழக அரசின் பார்வைக்கு வரும் முன்னர், உயர்நீதி மன்றத்திற்கு போய்விடும். அது தமிழக அரசுக்கும் அதன் பெயருக்கும் பாதகமாக அமையலாம். அல்லது ஆளும் கட்சியைச் சேர்ந்த பலர் அந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்பது போன்ற சில காரணங்கள் அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்க வாய்ப்பிருக்கிறது.

தமிழக அரசின் மேல் முறையீட்டிற்கு இது போன்ற ஒரு சில காரணங்களை நம்மால் யூகிக்க முடிந்தாலும், மாநிலத்தில் நடக்கும் எந்த ஒரு செயலும் தனது கட்டளைப்படியே நடக்கவேண்டும் தன்னை மீறி எதுவும் நடந்துவிடக்கூடாது என்ற எண்ணமும், பழிவாங்கலும் அவ்வப்போது ஜெயலலிதாவிடம் இருந்து அப்பட்டமாக வெளிப்படும் ஒரு குணம். அதுவே அவருடைய பலவீனமும் கூட.

அகல்
17.09.2014

Monday, 1 September 2014

தமிழக மாணவர்களும் ஈழ வியாபாரமும் - ஒரு அனுபவம்

தமிழ் மீனவர் உரிமை, தனித் தமிழீழம் போன்ற கோரிக்கையை முன்வைத்து, லயோலா கல்லூரி மாணவர்கள் முன்னெடுத்த போராட்டம், தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் என தீயாய்ப் பரவிக் கொண்டிருந்த நேரம் அது. அப்போது ஹைதராபாத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். என்னோடு தங்கி இருந்த இரண்டு கல்லூரி நண்பர்களின் துணையோடு, தமிழகத்தில் மாணவர்கள் நடத்திக் கொண்டிருந்த போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாக ஹைதராபாத்தில் ஒரு போராட்டத்தை முகநூல் வழியாக அறிவித்தோம்.

தமிழன் என்ற எண்ணத்தைத் தாண்டி, மனிதன் என்ற உணர்வோடு அங்கே எதிர்பாராத அளவிற்கு இளைஞர்கள் கலந்துகொண்டார்கள். சில நெருக்கடிகளோடு போராட்டம் நன்றாக நடந்து முடிந்தது. சில தமிழ் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சிகளிலும் இந்தப் போராட்டம் பதிவு செய்தது.

இந்தப் போராட்டம் முடிந்தவுடன், அடுத்த கட்ட போராட்டத்தைப் பற்றி நாங்கள் சிந்தித்துக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில், சென்னையில் உள்ள ஒரு தமிழர் அமைப்பிடம் இருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. நீங்கள் திடீரென அறிவித்து நடத்திய போராட்டம் எங்களுக்குத் தெரியாமல் போய்விட்டது, செய்திகளைப் பார்த்தே தெரிந்துகொண்டோம். இதுபற்றி முன்பே தெரிந்திருந்தால் ஹைதராபாத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் அரசியல் முதுகலை பிரிவை எடுத்துப் படித்துக் கொண்டிருக்கும் தமிழ் மாணவர்களை உங்களது போராட்டத்தில் கலந்துகொள்ள வைத்திருப்போம். அவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். போராட்டத்தை ஒருங்கிணைக்க அவர்களும் சரியான இளைஞர்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்றார்.

அதோடு, தனித் தெலுங்கானாவிற்காக போராடிக் கொண்டிருந்த ஒரு பல்கலைக் கழக மாணவர்களையும், தமிழ் மாணவர்கள் போராட்டத்திற்காக அழைத்து வருவார்கள் என்றார் தொலைபேசியில் என்னோடு உரையாடிய அந்தப் பெண். அடுத்த கட்ட போராட்டம் இன்னும் வலுவாக இருக்க வேண்டும் என்று கருதியதால், அவர் கூறிய யோசனையை ஒப்புக்கொண்டேன். அந்த தமிழ் மாணவர்களோடு பேசலாம் என்று நானும் எனது நண்பனும் தீர்மானித்தோம்.

சில முறை கைபேசி உரையாடல்களுக்குப் பிறகு, அந்த தமிழ் மாணவர்கள் எங்களை நேரில் சந்தித்து போராட்ட வடிவம் பற்றி பேச அழைத்தார்கள். நாங்கள் இருவரும் அவர்களின் கல்லூரி வளாகத்திற்கு அன்றிரவு போனோம். அன்று அவர்களது கல்லூரி ஆண்டுவிழா வெகு விமர்சியாக நடந்துகொண்டிருந்தது. அவர்களோடு பேசினோம். அரசியல் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களுக்குப் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் அவர்கள். நல்ல அரசியல் அறிவு இருந்ததை உணர முடிந்தது.

இரண்டு மணிநேர உரையாடல். அடுத்த கட்ட போராட்டத்திற்கு குறைந்தது 3000 மாணவர்களை நாங்கள் அழைத்து வருகிறோம். இந்தியா மிகவும் அறிந்த எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான அருந்ததிராயை போராட்டத்திற்கு அழைக்கிறோம். அவர் எங்களுக்கு நல்ல பழக்கமானவர். நாங்கள் அழைத்தால் வருவார் என்று அந்த மாணவர்கள் கூறினார்கள். போராட்டத்திற்கு மாணவர்களைத் திரட்டுவது எங்களது பொறுப்பு, ஒருகிணைப்பை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்கள்.

3000 மாணவர்கள், அருந்ததிராய் என்றெல்லாம் அவர்கள் கூறியபோதே அவர்கள் மேலிருந்த நம்பிக்கை சற்று குறைய ஆரம்பித்தது. இருந்தாலும் இவர்களின் எண்ணம் என்னவாக இருக்கும் என்று புரிந்துகொள்ள அவர்களோடு இன்னும் சற்றுநேரம் நேரத்தைக் கழிக்க முடிவு செய்தோம். எங்களது சந்தேகத்திற்கு வலுச்சேர்க்கும்விதமாக அவர்களின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் அமைந்தது.

அது பல்கலைக்கழக ஆண்டுவிழா. அந்த நிகழ்ச்சி ஒரு புறம் நடந்துகொண்டிருக்க, யாரும் இல்லாத மைதானத்திற்கு எங்களை அழைத்துச் சென்றார்கள். சாப்பாடு வரவழைத்து சாப்பிட்டுக்கொண்டே, நீண்ட நேரம் பேசினோம். தங்கள் கல்லூரி, அதன் கலாச்சாரம் என்று பேச ஆரம்பித்தவர்கள், மது வாங்கி வந்து குடித்துக் கொண்டே, அங்குள்ள பெண்களைப் பற்றி கேவலமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். போதையில் அவர்கள் பேசியதை கேட்கும்போது அவர்கள் கஞ்சா போன்ற மற்ற போதைப் பொருட்களை உபயோகிப்பவர்கள் என்று வெளிப்படையாகவே தெரிந்தது.

குடித்துக் கொண்டிருந்த மது தீர்ந்துவிடவே, மது வாங்க எனது வண்டியைக் கேட்டார்கள். மணி எப்படியும் குறைந்தது இரவு பன்னிரண்டு இருக்கும். குடித்திருக்கும் ஒருவனிடம் எனது வண்டியை அந்த நேரத்தில் கொடுக்க எனக்கு உடன்பாடில்லை. அதனால், நானே அவர்களோடு போனேன். மூடி இருந்த மதுக்கடையின் பின்வாசல் வழியாக எனது பணத்தையும் போட்டு, மது வாங்கிக் கொடுக்கவேண்டிய சூழ்நிலையெல்லாம் உருவானது. திரும்பி வந்தபிறகு எனது நண்பனிடம் நடந்தவற்றைக் கூறினேன். உடனே அந்த இடத்தைவிட்டு வெளியேறுவது என்று தீர்மானித்தோம்.

அவர்களோடு பேசியதில் எங்களால் ஒன்றைத் தெளிவாக புரிந்ததுகொள்ள முடிந்தது. அவர்களுக்கு ஈழ அரசியல் வரலாறு தெரியும். ஆனால் அவர்கள் படும் வழிகளைப் பற்றிக் கவலையில்லை. அவர்கள் உதவித்தொகையில் படிக்கும் மாணவர்கள் என்பதால், IT யில் வேலை செய்து கொண்டிருக்கும் எங்களைப் பயன்படுத்திக்கொண்டு, தங்களை முன்னிறுத்திக் கொள்ள நினைத்தார்கள். அதன்மூலம் விளம்பரம் தேடவோ அல்லது அவர்களுக்கு கொடுத்த ப்ரொஜெக்டை முடிக்க வேண்டும் என்பதோ அவர்களின் எண்ணமாக இருந்தது.

அவர்களின் வார்த்தையில் மனிதாபிமானமோ, இது செத்துக்கொண்டிருக்கும் மக்களுக்கான போராட்டம் என்ற குறைந்த பட்ச அக்கறையோ இருந்ததாகத் தெரியவில்லை. தமிழக அரசியல் கட்சிகளுக்கும் இந்த மாணவர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை என்பது தெளிவாகப் புரிந்தது. அன்று இரவு அவர்களோடு தங்கச் சொல்லி எங்களை வற்புறுதினார்கள். போராட்டத்தைப் பற்றி பிறகு பேசலாம் என்று சொல்லிவிட்டு, அந்த இடத்தைவிட்டு வெளியேறினோம்.

அடுத்த ஒரு வாரத்திற்கு அந்த மாணவர்களும் இருந்து மீண்டும் மீண்டும் தொலைபேசி அழைப்பு, நான் எடுக்கவில்லை. சென்னையில் இருக்கும் அந்த தமிழர் அமைப்பு என்னை மீண்டும் அழைத்து அவர்களிடம் பேசினீர்களா என்று கேட்டார்கள். இந்த மாணவர்கள் எப்படியானவர்கள் என்பது அவர்களுக்குத் தெரியாதா, இல்லை பரஸ்பர ஒப்பந்தத்தோடு விளம்பரத்திற்காக அவர்கள் வேலை செய்தார்களா என்பதெல்லாம் தெரியவில்லை. அதனால் அந்த தமிழர் அமைப்பிடம் இந்த மாணவர்களின் எண்ணங்களைப் பற்றி எதுவும் பேசாமல் வேறுசில காரணங்களைச் சொல்லிவிட்டு அவர்களது வட்டத்திற்கும் இருந்து வெளியேறினோம். ஆனால் தமிழர்களுக்கு முதல் எதிரி தமிழன் தான் என்று வரலாறு நமக்குச் சொல்லித் தந்ததை இவர்கள் மீண்டும் ஞாயபகப்படுத்தினார்கள்.

நாங்கள் நடத்திய முதல் போராட்டத்தில் ஆயிரக்காணக்கான மக்கள் கலந்துகொள்ளவில்லை என்றாலும், அது மிகவும் கண்ணியமாக, உணர்வுப் பூர்வமாக நடந்த ஒன்று. இவர்களை அழைத்து, அடுத்த போராட்டத்தை நடத்தி, அப்பாவி ஆத்மாக்களை நாங்கள் கொச்சை
ப்படுத்த விரும்பவில்லை. அதனால் தவிர்த்து விட்டோம். இந்த சம்பவத்தைப் பற்றி அப்போது நான் எழுதவுமில்லை. 

அப்போதே எழுதவேண்டியதானே ? இப்போது எதற்கு இந்த கட்டுரை என்று நீங்கள் கேட்கலாம். ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக, பல தமிழ் மாணவர்கள் உயிரின் விளிம்புவரை சென்று போராடிக்கொண்டிருந்த காலகட்டத்தில், இப்படி ஒரு கட்டுரை எழுதினால் தமிழ் மாணவர்கள் சமுதாயத்தையும் அவர்கள் நடத்தும் போராட்டத்தையும் தவறான கண்ணோட்டத்தில் காட்டும் என்ற ஐயம் எனக்குள் இருந்ததால், சூழ்நிலை கருதி அப்போது தவிர்த்துவிட்டேன்.

ஆனால் இதை எழுதாமல் விட்டுவிட்டால், தமிழ் நாட்டில் ஈழ வியாபாரம் செய்ய, இப்படி ஒரு மாணவர் சமுதாயமும் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பதிவு செய்யாமல் போய்விடும் என்ற எண்ணத்தால் இப்போது பதிவு செய்கிறேன். நன்றி !

அகல்

1.9.2014

Sunday, 17 August 2014

நினைவுகள் -1 இடைவெளியைக் குறைத்து விடுங்கள்

இன்று ஆகஸ்ட் 18. என் வாழ்வில் என்றும் மறக்க முடியாத நாள். எனது அண்ணன் ஒரு பெரிய விபத்தைச் சந்தித்து, இரண்டு நாட்கள் தீவிர மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு சிகிச்சைப் பலனின்று எங்களைவிட்டுப் பிரிந்த நாள்.

எனக்கும் என் அண்ணனுக்குமான அன்பு என்பது வரையறைகளுக்கு அப்பாற்பட்டது. அது அண்ணன் தம்பி என்ற உறவைத் தாண்டியது. எங்கள் குணங்கள், செய்கைகள் யாவும் எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும், இருவரின் உணர்வுகளும் ஒரே நேர்கோட்டில் கடைசிவரை பயணித்தவை. எந்த ஒரு விடயத்தையும் பகிர்ந்துகொள்வதில் நாங்கள் தயங்கியதில்லை. எங்களுக்குள் பெரிதாக சண்டைகள் வந்தது கிடையாது என்றாலும், எல்லோரையும் போல் சிறு சிறு கருத்து முரண்பாடுகள் வாக்குவாதங்கள் என்று இருவரும் ஈடுபட்டதுண்டு.

இப்படியான எங்கள் வாழ்க்கையில், ஒரு முறை என் அண்ணன் கேட்டதை நான் இருந்த சூழலில் உடனடியாக என்னால் செய்து தரமுடியவில்லை. அதை நான் சரியாக என் அண்ணனிடம் வெளிபடுத்தவில்லை என்பதால் நான் வேண்டுமென்றே செய்யவில்லை என்று எண்ணி என்னிடம் என் அண்ணன் சரியாகப் பேசவில்லை. எங்களுக்குள்ளான தொலைபேசி உரையாடல்கள் குறைந்தது. நான் ஹைதராபாத்தில் இருந்து வீட்டுக் போகும்போதும் அண்ணன் என்னிடம் சரியாக பேசுவதில்லை.

முன்பே இது போன்ற சிறு சிறு இடைவெளிகள் எங்களுக்கிடையே வந்துபோனதால், சூழ்நிலை வரும்போது அண்ணன் புரிந்துகொள்வான் சரியாகிவிடும் என்று நினைத்துக் கொண்டு நானும் அடிக்கடி தொலைபேசியில் பேசுவதை நிறுத்திவிட்டேன். பேச்சுவார்த்தைகள் இன்றி நான்கு மாதங்கள் கடந்தோடியது. 2011 ஆகஸ்ட் 16 ஆம் தேதியன்று திடீரென ஒரு தொலை பேசி அழைப்பு, அண்ணன் விபத்தில் சிக்கிவிட்டான் என்று. சுயநினைவை இழந்தேன். அடித்துப் பிடித்து அடித்த நாள் ஹைதராபாத்தில் இருந்து மதுரை மருத்துவமனைக்குச் சென்றேன்.

அண்ணன் சுயநினைவில் இல்லை. சுற்றி என்ன நடக்கிறது என்று அவனுக்குத் தெரியவில்லை. இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சையில் ஒரு முறைகூட விழித்துப் பார்க்கவில்லை. இரண்டு நாள் சிகிச்சையும் பலனளிக்காமல், ஆகஸ்ட் 18 மாலை 5.15 என் கண் முன்னே 29 வயதில் அண்ணனின் உயிர் பிரிந்தது. நமது இதயத்திற்கு மிக நெருக்கமானவர்களின் உயிர், நம் கண்முன்னே பிரிவதைவிட ஒரு கொடுமையான சம்பவம் இந்த உலகில் வேறு எதுவும் இருக்கமுடியுமா என்று தெரியவில்லை.

அதனால், நான் உங்களுக்குச் சொல்வதெல்லாம் ஒன்றுதான். உண்மையாக அன்பு செலுத்துவோர்களிடம் அவ்வப்பது சிறு சிறு இடைவெளிகள் வந்துபோவது இயல்புதான் என்றாலும், அதைத் தயவு செய்து தொடர விட்டுவிடாதீர்கள்.

நான்கு மதங்களுக்கு முன் பேசியது தான் அவனிடம் பேசிய கடைசி வார்த்தை என்று நினைக்கும்போது ஏற்படும் வலிக்கு இன்னும் என்னால் மருந்து போடமுடியவில்லை. கடைசிவரை பேச முடியவில்லை என்று மனதில் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணமே, ஜீரணிக்க முடியாத ஒரு கொடுமையான வலி தான்.

- அகல்

அன்புள்ள அண்ணனுக்கு தம்பி எழுதுவது...

அண்ணா...
எப்படி இருகிறாய்..?

பார்த்துப் பேசி மூன்று
வருடங்கள் ஆகிப்போனது
நலமாக இருக்கிறாயா..?

சொர்க்கம், நரகம்
என்றெல்லாம்
சொல்கிறார்களே
நீ எங்கு இருகிறாய்..?

ஊருக்கே நல்லவனாயிற்றே
நீ எப்படி நரகத்தில் இருப்பாய்..!?

எத்தனை மருந்திட்டாலும்
எதையும் மறக்க முடியவில்லை
அண்ணா...

உன்னோடு நான் பிறந்த ஊர்
நம் இருவரையும் பெற்றெடுத்த தாய்
இருவரும் சேர்ந்து உணவு 
உட்கொண்ட வட்டில்
நாம் ஒன்றாக ஊர்சுற்றிய நாட்கள்

பள்ளிப் பருவத்தில்
நடந்து என் கால் வலிக்கும் நேரம்,
குதிரையாய் மாறிய நீ
பொதியாய் மாறிய நான்

எனக்கு உடல் நிலை
சரியில்லையாயின்
துடித்துப் போகும்
உன் மனது

எனக்காக மற்றவர்களிடம்
நீ சண்டையிட்ட தருணங்கள்

நாம் இருவரும் போட்டுக் 
கொண்ட ஒரு நாள் சண்டை

அதன் விளைவாக
என் உடலோடு இன்றும் 
ஒட்டிகொண்டிருக்கும்
ஒற்றைத் தழும்பு 

இவ்வுலகில் 
நினைவிழந்து நீ வாழ்ந்த
இரண்டு நாட்கள்

உன் உயிர்(என் உயிர்) இந்த உலகைப்
பிரிந்த அந்த கொடிய நொடிப் பொழுது

விறகின் மேல் வீற்றிருந்த நீ
உனது நெற்றியில்
நான் கொடுத்த கடைசி முத்தம்

உன் உடல் நெருப்பிற்கு
இரையான வேளையில்
நான் உருண்டு புரண்ட 
அந்த மயானக் காடு

உனைப் பிரிந்த இரவுகளில்
எனது ஓலங்கள்

உனது நினைவுகள் மட்டுமே 
நிறைந்து கிடக்கும் நமது வீடு

எதையும் மறக்க
முடியவில்லை அண்ணா..

ஊமையின் கனவுகளாய்
அத்தனையும் என் நினைவுகளில்..

சிலமுறை காற்றோடு 
தேடித் பார்க்கிறேன்
கைகளுக்கு அகப்படுவாயென..

அந்த கோர விபத்து
நமது வாழ்கையின் 
திசைகளைத்
திருப்பிப் போட்டது

அது ஆயிரம் விடயங்களை
எனக்கு கற்றும் கொடுத்தது

இவ்வுலகில் விபத்திற்கு
ஏதும் விபத்து வராதா..?

நீ விபத்தில் சிக்கிய செய்தி அறிந்து
விமான நிலையம் நோக்கி ஓடிய எனக்கு
திருவிழாக் கூட்டமாய் இருந்த அந்த இடம்
ஏனோ மேகமில்லா வானமாய்
வெறிச்சோடித்தான் தெரிந்தது

வாழ்க்கையில் இத்தனை 
மணிப் பொழுதுகள்
எதற்காகவும் என் கண்ணீர்த்
துளிகள் கரைந்ததாய்
எனக்கு ஞாபகம் இல்லை..

இருந்தும்...

எப்படியும் உனைக் காப்பாற்ற 
முடியும் என்ற நம்பிக்கையில்
விமானம் ஏறி அமர்ந்துவிட்டு
அதை இன்னும் வேகமாகச் செல்லச் 
சொல்லி மனம் பரிதவித்தது...

தட்டுத் தடுமாறி 
உன்னை அடைந்தேன்..

ஆனால், 
நீ என்னைப் பார்க்கமுடியவில்லை
நான் உன்னோடு பேசமுடியவில்லை

நடப்பதறியாது
மற்றவரோடு பேசாது
வாழ்நாளில் நீ
மௌனம் காத்த நாட்கள்
அந்த இரண்டு நாட்களாகத்தான்
இருக்கும்...

இவ்வுலகில்
தாங்க முடியாத வலிகளில் ஒன்று
உயிராய் நேசிப்பவரின் உயிர்
நேசிப்பவர் கண்முன்னே பிரிவது

அந்த கொடிய வலியையும்
எனக்கு கொடுத்து விட்டாய்..!

உனை
இந்த மண் எடுத்துக்கொண்ட நாளில்
இனி வாழ்ந்து பயனேது என்றெண்ணி

தற்கொலை முயற்சிக்கும்
தயாரானேன் - இருந்தும்
தவிர்த்து விட்டேன்

என்ன செய்வது...

இன்று நீ இல்லை
நம்மைப் பெற்றோருக்கு
என்னை விட்டால்
வேறு நாதி இல்லை

27 ஆண்டுகள்
உன்னோடு வாழ்ந்த வீட்டில்
இன்று 27 நிமிடங்களும்
இமயமாய்ப் போனது

உனைப் பிரிந்த நாட்களில்
சிரிக்கப் பழகிக் கொண்டேன்

சொல்லப் போனால்
உண்மையை மறைக்கப் 
பழகிக் கொண்டேன்..

என்னைத் தவிக்க விட்டுப் போனாய்
பரவாயில்லை...
ஒரு பெண்ணையும் தவிக்க 
விட்டுப் போனாயே..!

நிரந்தரமாகப் பிரிவைக் கொடுத்து 
விட்டோம் என்று - நீ
நினைத்துக் கொள்ளாதே

என் நாடித் துடிப்பின்
கடைசி நொடிப் பொழுதும்
உன் நினைவுகளில் நானிருப்பேன்
என் நிழலிலும் நீ இருப்பாய்

உயிர் பிரிந்த பின்னும்
என் ஆன்மா உன் நினைவுகளை
அசை போட்டிக் கொண்டிருக்கும்..

மறு ஜென்மம் இருப்பது
உண்மையானால்

நீ இப்போதே பிறந்து விடாதே
முதலில் நான் இறந்து விடுகிறேன்

பின்பு
அதே வயிற்றில்
மீண்டும் பிறப்போம்

நீ அண்ணனாக
நான் தம்பியாக..!

உன் நினைவுகளோடு,
தம்பி

இன்று ஆகஸ்ட் 18 - எனது வாழ்வில் மிகப்பெரும் பேரிழப்பைச் சந்தித்த நாள். பிரிவின் வலி என்னவென்று எனக்கு உணத்திய நாள். என் அன்பு அண்ணனின் மூன்றாம் ஆண்டு நினைவுநாள்.

Sunday, 10 August 2014

எதற்காக ஒரு மொழியும் கலாச்சாரமும் காக்கப்பட வேண்டும் ?

ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியைச் சேர்ந்த மக்கள், ஒரு வலுவான நேர்கோட்டில் உணர்வுகளால் பிணைப்பட்டிருப்பார்களேயானால், அது அவர்களுடைய மொழி, கலாச்சாரம், பண்பாடு என்ற நேர்கோடாக மட்டுமே இருக்க முடியும். எப்பொழுது அந்த மொழி, கலாச்சாரம் என்ற நேர்கோடு உடைக்கப்படுகிறதோ, அப்பொழுதே அவர்களுக்கு இடையேயான உணர்வுப்பூர்வமான பிணைப்பும் உடைக்கப்படுகிறது.

இப்படியான ஒரு சூழ்நிலையை உருவாக்கும்போது, அந்த நிலப்பரப்பைச் சேர்ந்த மக்கள் ஒன்றாக ஒற்றுமையாக இருக்கும் வாய்ப்பு குறைந்து இடைவெளி அதிகரிக்கிறது. அந்த நிலப்பரப்பு, மொழியைச் சேர்ந்த ஒருவனை அடித்தால் இன்னொருவன் வந்து கேள்வி கேட்கப்போவதில்லை என்ற நிலைமை உருவாகிறது.

இந்த இடைவெளியை உருவாக்குவதும், அதைப் பயன்படுத்திக்கொண்டு அந்த மக்களை ஆதிக்கம் செய்வதுமே வெளியிலிருந்து வருபவனின் முதல் குறிக்கோளாக இருக்கிறது. ஆங்கிலேயர்கள் நம்மை ஆழ பயன்படுத்திய சூத்திரங்களில் இதுவும் ஒன்று என்பதை அறிந்தவர்கள், தங்கள் மொழியும் பண்பாடும் எவ்வளவு முக்கியம், அதைக் கட்டிக்காப்பது எவ்வளவு அவசியம் என்பதை உணர்வார்கள். இதை அறியாதவர்கள், இந்த மொழியைக் கட்டிக்கொண்டு அழுவதில் என்ன பயன் என்று பிதற்றுவார்கள்.

நமது மக்களில் ஒற்றுமையைக் குலைத்து அவர்களை ஆள்வதைக் குறிக்கோளாகக் கொண்டே இந்த மேலைநாட்டு கார்பரேட் நிறுவனங்கள் முதல், வட இந்திய இந்தித்துவவாதிகள் வரை குறிக்கோளாக வைத்து திட்டங்களைச் செயல்படுத்துகிறார்கள். தங்களின் எண்ணங்களைச் செயல்படுத்த இன்றைய ஆதிக்க சக்திகள் முதலில் விலைக்கு வாங்குவது, அந்த நிலப்பரைப்பைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தும் ஊடகங்களை.

இந்த ஆதிக்க சக்திகளை முதலில் அடித்து விரட்ட வேண்டும் என்ற அடிப்படை, மேலைநாட்டு மோகத்தில் மூழ்கிக் கிடக்கும் தமிழர்களுக்கு என்று புரியப்போகிறதோ அன்றே நமது மக்களின் விடுதலைக்கான பாதை திறக்கப்படுகிறது


- அகல்

Monday, 4 August 2014

எனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 26


***

உடல் நிலை
குன்றிய நிலையில் 
குளிர் பிரதேசத்தில் நான்

உள்மனதில்
அன்றொருநாள்
அம்மா சமைத்து
ஊட்டிய
சமையலின் வாசம்

***

அங்கே நீ
இங்கே நான்
இரு போர்வை
ஈருறக்கம்
கனவுகள் மட்டும்
ஒன்றாய்

***

நுணல் தன்
துணைதேடும்
மழைநாள்

வயல்வெளி
திருவிழாவாகிறது

***

ஒரு
மெழுகுவர்த்தியின்
முனையில்
உயிரை
மாய்த்துக்கொள்கிறது

உனக்காக
இதுவரை எழுதிய
எனது காதல்
கடிதங்கள்

***

உன்
பட்டுப் பாவடையில்
வண்ணத்துப் பூச்சி
இருக்கவும் முடியாமல்
பறக்கவும் முடியாமல்

***

இன்னும்
எழவில்லை
சூரியன்

எதிர்பார்த்துக்
காத்திருக்கிறது
சூரியகாந்தி

***

எதற்கு நீ
என்னைச் சுற்றுகிறாய்
என்று காரணம்
கேட்டபோதெல்லாம்

பூமி எதற்கு
தன்னைச் சுற்றுகிறது
என்று காரணம்
கேட்டவன் நீ

***

ஏக்கத்தோடு கூவும்
என் வீட்டு
வேப்பமரத்துக்
குயிலின் குரல்
அமெரிக்காவரை
கேட்கிறது

அம்மாவின்
கைபேசி வழியாக

***

கண்கள்
அறிந்திராத காதல்
காற்றுவழி
மகரந்தச் சேர்க்கை

***

உன் வீட்டு
ஜன்னல்
கதவுகளைச்
சாத்தி வைக்காதே

தென்றலாவது
தீண்டிவிட்டுப்
போகட்டும்

***