Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Sunday, 21 September 2014

சிறை

அந்திவானம்
இளம் தென்றல்
பூக்கள்
பறவைகள்
பட்டாம் பூச்சிகள்
மேகம்
மழை
நிலவு
நட்சத்திரங்கள்
மழலையின் சிரிப்பு
பருவப்பெண்கள்
யாவரும்

காலம் காலமாக
சிறைபட்டுக்
கிடக்கிறார்கள்
கவிஞர்களின்
பேனா நுனியில் !


 - அகல்

பொய்காரன்

எனது
ரயில் பயணத்தில்

அந்த ரயிலையும்
உன் நினைவுகளையும்
அன்றி
யாரையும்
நான் துணைக்கு
அழைத்து வரவில்லை
என்று சொல்லும்
என்னைப் பார்த்து

நீ ஒரு
உலகமாக
பொய்காரன்
என்கிறது

அந்த
ஜன்னல் வழி
இடைவெளியில்
மடிவிரித்துத்
தாலாட்டிய நிலவு !


- அகல்

Sunday, 17 August 2014

அன்புள்ள அண்ணனுக்கு தம்பி எழுதுவது...

அண்ணா...
எப்படி இருகிறாய்..?

பார்த்துப் பேசி மூன்று
வருடங்கள் ஆகிப்போனது
நலமாக இருக்கிறாயா..?

சொர்க்கம், நரகம்
என்றெல்லாம்
சொல்கிறார்களே
நீ எங்கு இருகிறாய்..?

ஊருக்கே நல்லவனாயிற்றே
நீ எப்படி நரகத்தில் இருப்பாய்..!?

எத்தனை மருந்திட்டாலும்
எதையும் மறக்க முடியவில்லை
அண்ணா...

உன்னோடு நான் பிறந்த ஊர்
நம் இருவரையும் பெற்றெடுத்த தாய்
இருவரும் சேர்ந்து உணவு 
உட்கொண்ட வட்டில்
நாம் ஒன்றாக ஊர்சுற்றிய நாட்கள்

பள்ளிப் பருவத்தில்
நடந்து என் கால் வலிக்கும் நேரம்,
குதிரையாய் மாறிய நீ
பொதியாய் மாறிய நான்

எனக்கு உடல் நிலை
சரியில்லையாயின்
துடித்துப் போகும்
உன் மனது

எனக்காக மற்றவர்களிடம்
நீ சண்டையிட்ட தருணங்கள்

நாம் இருவரும் போட்டுக் 
கொண்ட ஒரு நாள் சண்டை

அதன் விளைவாக
என் உடலோடு இன்றும் 
ஒட்டிகொண்டிருக்கும்
ஒற்றைத் தழும்பு 

இவ்வுலகில் 
நினைவிழந்து நீ வாழ்ந்த
இரண்டு நாட்கள்

உன் உயிர்(என் உயிர்) இந்த உலகைப்
பிரிந்த அந்த கொடிய நொடிப் பொழுது

விறகின் மேல் வீற்றிருந்த நீ
உனது நெற்றியில்
நான் கொடுத்த கடைசி முத்தம்

உன் உடல் நெருப்பிற்கு
இரையான வேளையில்
நான் உருண்டு புரண்ட 
அந்த மயானக் காடு

உனைப் பிரிந்த இரவுகளில்
எனது ஓலங்கள்

உனது நினைவுகள் மட்டுமே 
நிறைந்து கிடக்கும் நமது வீடு

எதையும் மறக்க
முடியவில்லை அண்ணா..

ஊமையின் கனவுகளாய்
அத்தனையும் என் நினைவுகளில்..

சிலமுறை காற்றோடு 
தேடித் பார்க்கிறேன்
கைகளுக்கு அகப்படுவாயென..

அந்த கோர விபத்து
நமது வாழ்கையின் 
திசைகளைத்
திருப்பிப் போட்டது

அது ஆயிரம் விடயங்களை
எனக்கு கற்றும் கொடுத்தது

இவ்வுலகில் விபத்திற்கு
ஏதும் விபத்து வராதா..?

நீ விபத்தில் சிக்கிய செய்தி அறிந்து
விமான நிலையம் நோக்கி ஓடிய எனக்கு
திருவிழாக் கூட்டமாய் இருந்த அந்த இடம்
ஏனோ மேகமில்லா வானமாய்
வெறிச்சோடித்தான் தெரிந்தது

வாழ்க்கையில் இத்தனை 
மணிப் பொழுதுகள்
எதற்காகவும் என் கண்ணீர்த்
துளிகள் கரைந்ததாய்
எனக்கு ஞாபகம் இல்லை..

இருந்தும்...

எப்படியும் உனைக் காப்பாற்ற 
முடியும் என்ற நம்பிக்கையில்
விமானம் ஏறி அமர்ந்துவிட்டு
அதை இன்னும் வேகமாகச் செல்லச் 
சொல்லி மனம் பரிதவித்தது...

தட்டுத் தடுமாறி 
உன்னை அடைந்தேன்..

ஆனால், 
நீ என்னைப் பார்க்கமுடியவில்லை
நான் உன்னோடு பேசமுடியவில்லை

நடப்பதறியாது
மற்றவரோடு பேசாது
வாழ்நாளில் நீ
மௌனம் காத்த நாட்கள்
அந்த இரண்டு நாட்களாகத்தான்
இருக்கும்...

இவ்வுலகில்
தாங்க முடியாத வலிகளில் ஒன்று
உயிராய் நேசிப்பவரின் உயிர்
நேசிப்பவர் கண்முன்னே பிரிவது

அந்த கொடிய வலியையும்
எனக்கு கொடுத்து விட்டாய்..!

உனை
இந்த மண் எடுத்துக்கொண்ட நாளில்
இனி வாழ்ந்து பயனேது என்றெண்ணி

தற்கொலை முயற்சிக்கும்
தயாரானேன் - இருந்தும்
தவிர்த்து விட்டேன்

என்ன செய்வது...

இன்று நீ இல்லை
நம்மைப் பெற்றோருக்கு
என்னை விட்டால்
வேறு நாதி இல்லை

27 ஆண்டுகள்
உன்னோடு வாழ்ந்த வீட்டில்
இன்று 27 நிமிடங்களும்
இமயமாய்ப் போனது

உனைப் பிரிந்த நாட்களில்
சிரிக்கப் பழகிக் கொண்டேன்

சொல்லப் போனால்
உண்மையை மறைக்கப் 
பழகிக் கொண்டேன்..

என்னைத் தவிக்க விட்டுப் போனாய்
பரவாயில்லை...
ஒரு பெண்ணையும் தவிக்க 
விட்டுப் போனாயே..!

நிரந்தரமாகப் பிரிவைக் கொடுத்து 
விட்டோம் என்று - நீ
நினைத்துக் கொள்ளாதே

என் நாடித் துடிப்பின்
கடைசி நொடிப் பொழுதும்
உன் நினைவுகளில் நானிருப்பேன்
என் நிழலிலும் நீ இருப்பாய்

உயிர் பிரிந்த பின்னும்
என் ஆன்மா உன் நினைவுகளை
அசை போட்டிக் கொண்டிருக்கும்..

மறு ஜென்மம் இருப்பது
உண்மையானால்

நீ இப்போதே பிறந்து விடாதே
முதலில் நான் இறந்து விடுகிறேன்

பின்பு
அதே வயிற்றில்
மீண்டும் பிறப்போம்

நீ அண்ணனாக
நான் தம்பியாக..!

உன் நினைவுகளோடு,
தம்பி

இன்று ஆகஸ்ட் 18 - எனது வாழ்வில் மிகப்பெரும் பேரிழப்பைச் சந்தித்த நாள். பிரிவின் வலி என்னவென்று எனக்கு உணத்திய நாள். என் அன்பு அண்ணனின் மூன்றாம் ஆண்டு நினைவுநாள்.

Monday, 4 August 2014

எனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 26


***

உடல் நிலை
குன்றிய நிலையில் 
குளிர் பிரதேசத்தில் நான்

உள்மனதில்
அன்றொருநாள்
அம்மா சமைத்து
ஊட்டிய
சமையலின் வாசம்

***

அங்கே நீ
இங்கே நான்
இரு போர்வை
ஈருறக்கம்
கனவுகள் மட்டும்
ஒன்றாய்

***

நுணல் தன்
துணைதேடும்
மழைநாள்

வயல்வெளி
திருவிழாவாகிறது

***

ஒரு
மெழுகுவர்த்தியின்
முனையில்
உயிரை
மாய்த்துக்கொள்கிறது

உனக்காக
இதுவரை எழுதிய
எனது காதல்
கடிதங்கள்

***

உன்
பட்டுப் பாவடையில்
வண்ணத்துப் பூச்சி
இருக்கவும் முடியாமல்
பறக்கவும் முடியாமல்

***

இன்னும்
எழவில்லை
சூரியன்

எதிர்பார்த்துக்
காத்திருக்கிறது
சூரியகாந்தி

***

எதற்கு நீ
என்னைச் சுற்றுகிறாய்
என்று காரணம்
கேட்டபோதெல்லாம்

பூமி எதற்கு
தன்னைச் சுற்றுகிறது
என்று காரணம்
கேட்டவன் நீ

***

ஏக்கத்தோடு கூவும்
என் வீட்டு
வேப்பமரத்துக்
குயிலின் குரல்
அமெரிக்காவரை
கேட்கிறது

அம்மாவின்
கைபேசி வழியாக

***

கண்கள்
அறிந்திராத காதல்
காற்றுவழி
மகரந்தச் சேர்க்கை

***

உன் வீட்டு
ஜன்னல்
கதவுகளைச்
சாத்தி வைக்காதே

தென்றலாவது
தீண்டிவிட்டுப்
போகட்டும்

***

Thursday, 21 November 2013

எனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 25

***

நிலவின் பிரிவில்
தவிக்கும் இரவு
அமாவாசை !

***

இழவுவீடு
அறியாத உறவு
இருந்தும் அழுகிறது
பறை !

***

உனக்காக நான் என்னை
மாற்றிக் கொள்கிறேன்
என்று நீ சொல்லும்போதெல்லாம்
உனக்காக நான் என்னை
மாற்றிக் கொள்கிறேன் !
 

***

இன்னும்
அதிகாலைச் சோம்பல்
களையவில்லை நீ
உனை ஒளிந்து நின்று
வேடிக்கை பார்க்கிறது
ஜன்னலோரச் சூரியன் !

***

மழை பெய்கிறது
உள்ளே வா 
என்கிறாள் அம்மா
அவள்
கரையான் கூட்டிற்கு
குடைபிடித்துக்
கொண்டிருக்கிறாள் !

***

கீழ்சாதிக்காரன்
நுழைய அனுமதி
இல்லாத கோவில்
உச்சியில் எச்சில்
உமிழ்கிறது காகம் !
 

***

ஒரு கவிதை
எழுதிவிட நினைத்து
காத்திருந்த இரவு
எழுதாமல் நகர்ந்து
கொண்டிருக்கையில்

செல்போன்
வாயிலாக
ஹலோ என்கிறது
ஒரு கவிதை !

***

அந்த நள்ளிரவு நேரத்தில்
என் நெற்றியில்
ஒற்றை முத்தமிட்டுவிட்டு
யாரும் பார்க்கவில்லை
என்று சொல்லி 
புண்முறுவலிடுகிறாய் நீ

வெளிச்சத்தை
அணைத்துவிட்டு
தனது இருப்பை
உறுதி செய்கிறது
மின்சாரவிளக்கு !

***

ஒரு அகதிக்கு
பின்வீட்டை
சுத்தம் செய்து 
கொடுத்தாள் அம்மா

அகதியானது
பல கரப்பான்
பூச்சிகள் !


***

உன்னோடு 
செலவு செய்த
மணித்துளிகளெல்லாம்
கவிதையாகிறது

கவிதையின் தலைப்பாய்
நீயாகிறாய் !

***

Tuesday, 8 October 2013

எனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 24

***

பூங்காவின் மையத்தில்
கொஞ்சம் இடைவெளிவிட்டு
அமர்ந்திருக்கிறோம் நாம்


அந்த இடைவெளியில்
நமது குழந்தையைப்போல்
அமர்ந்திருக்கிறது காற்று !

***


எனது விரல்கள்
உன்னையும் 
உனது விரல்கள்
என்னையும்
தொட்டுவிடக் கூடாது
என்று கவனமாக 
நடந்து கொண்டிருக்கிறோம்

தோள்கள் இரண்டும்
உரசிக்கொண்டிருக்கிறது !


***

எனது வீட்டிற்கும்

தூக்கணாம் குருவிக் 
கூட்டிற்கும்
ஒரு வித்தியாசம்தான்

எனக்கு
வீட்டினுள் ஊஞ்சல்
அதற்கு
ஊஞ்சலில் வீடு !


***


அனாதைத்
தேனீக்கள்

பூக்களை மார்பாக்கி
பாலூட்டுகிறது 

பூச்செடிகள் !

***

நெற்றியில்
முத்தமிடுவதிலும்
முந்தானையில்
முகம் துடைப்பதிலும்
அன்பின் ஆழம்
என்னவென்று
அறியவைத்தவள் நீ !


***


அழகு ததும்பிய
நிலா மகளை
ஒளித்து வைக்கும்
முயற்சியில்
ஓடிக்கொண்டே
இருக்கிறது மேகம் !


***

இதுவரை அம்மா
இல்லா
 வருத்தம்
இன்று முதல்
இல்லை என்கிறாள்

என் தோளில் சாய்ந்தபடி !


***

ஐந்து வருடங்களுக்குப்
பிறகும் இதே அன்போடு
இருக்க வேண்டும்
என்கிறாள் அவள்

அறுபது வயதிற்குப்
பிறகும் இதே அன்போடு
இருக்க வேண்டும்
என்கிறேன் நான் !


***

கருவேலங்கட்டிற்குள்
கதறிக் கொண்டிருக்கிறது
சில்வண்டு

அதைக்

கண்டுகொள்ளாமல்
கடந்துவருகிறது
காற்று !


***


உன்னைப்
புரிந்துகொள்ள
ஆசைப்பட்டு
மௌனத்தின் மொழியை
மொழிபெயர்த்துக்
கொண்டிருக்கிறேன் !


***

அன்புடன்,
அகல்

Saturday, 24 August 2013

எனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 23

***

என் வீட்டு ஜன்னலுக்கும்
உன் வீட்டு ஜன்னலுக்கும்
ஓடிப்பிடித்து விளையாடுகிறது காற்று
உனக்கும் எனக்கும் தெரியாமல்

***

என்னதான்
சொல்கிறதோ
காற்று

தலை
அசைத்துக்கொண்டே
இருக்கிறது
ஆவாரம்பூ

***

இரண்டு ரோஜா
இதழ்களுக்கு இடையே
சில மல்லிகை இதழ்கள்
அவளது பற்கள்

***

மூங்கில் இலையில்
தூங்குகிறது
மழைத்துளி

தாலாட்டுப்
பாடுகிறது 
கருங்குயில்

***

நள்ளிரவு நகர்ந்து
கொண்டிருக்கிறது

என்வீட்டு
ஜன்னல் கம்பியும்
பிறைநிலவும்
ஏதோ பேசிக்
கொண்டிருக்கிறார்கள்

***

சிதைந்துபோன
வார்த்தைகளில் 
அழகாகிறது
மழலை மொழி 

***

நெற்றிவழியே 
நடந்து வந்த
வியர்வைத்துளி
ஓய்வு எடுத்துக்
கொண்டிருக்கிறது 
உன் கன்னக் குழியில்

***

பூ வைக்க ஆளில்லை 
பறிக்கப்படாமல் இருக்கிறது 
ரோஜா மலர்கள் 
அமெரிக்க வீதிகளில்

***

இப்படியெல்லாம்
இருப்பது எனக்குப் பிடிக்கும்
என்று சொல்லும் முன்னே
இப்படி இருக்கத்தான்
பிடிக்கும் என்று சொல்லிவிடுகிறாய்

***

படம் முடிந்தவுடம்
போடப்படும் "சுபம்"
போலாகிவிடுகிறது

பேசி முடிக்கும்போது
உனது சில நொடி
சினுங்கல் 

***

அன்புடன்,
அகல்