***
நிலவின் பிரிவில்
தவிக்கும் இரவு
அமாவாசை !
***
இழவுவீடு
அறியாத உறவு
இருந்தும் அழுகிறது
பறை !
***
உனக்காக நான் என்னை
மாற்றிக் கொள்கிறேன்
என்று நீ சொல்லும்போதெல்லாம்
உனக்காக நான் என்னை
மாற்றிக் கொள்கிறேன் !
***
இன்னும்
அதிகாலைச் சோம்பல்
களையவில்லை நீ
உனை ஒளிந்து நின்று
வேடிக்கை பார்க்கிறது
ஜன்னலோரச் சூரியன் !
***
மழை பெய்கிறது
உள்ளே வா
என்கிறாள் அம்மா
அவள்
கரையான் கூட்டிற்கு
குடைபிடித்துக்
கொண்டிருக்கிறாள் !
***
கீழ்சாதிக்காரன்
நுழைய அனுமதி
இல்லாத கோவில்
உச்சியில் எச்சில்
உமிழ்கிறது காகம் !
***
ஒரு கவிதை
எழுதிவிட நினைத்து
காத்திருந்த இரவு
எழுதாமல் நகர்ந்து
கொண்டிருக்கையில்
செல்போன்
வாயிலாக
ஹலோ என்கிறது
ஒரு கவிதை !
***
அந்த நள்ளிரவு நேரத்தில்
என் நெற்றியில்
ஒற்றை முத்தமிட்டுவிட்டு
யாரும் பார்க்கவில்லை
என்று சொல்லி
புண்முறுவலிடுகிறாய் நீ
வெளிச்சத்தை
அணைத்துவிட்டு
தனது இருப்பை
உறுதி செய்கிறது
மின்சாரவிளக்கு !
***
ஒரு அகதிக்கு
பின்வீட்டை
சுத்தம் செய்து
கொடுத்தாள் அம்மா
அகதியானது
பல கரப்பான்
பூச்சிகள் !
***
உன்னோடு
செலவு செய்த
மணித்துளிகளெல்லாம்
கவிதையாகிறது
கவிதையின் தலைப்பாய்
நீயாகிறாய் !
***